கையை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை… உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற மாற்றுத்திறனாளி

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், மே 24– கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிறீ கலா, ஆசிரியர்.

இவர்களது மகள் பார்வதி கோபகுமார் (வயது27). இவர் கடந்த 2010ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த விபத்தில் வலது கையை இழந்தார். அதன்பின்பு அவருக்கு செயற்கை கை பொருத்தப்பட்டது.

விதையை மரமாக்கிய
கடின உழைப்பு

எழுதுவது உள்பட வலது கையின் அனைத்து செயல்பாடுகளையும் இடது கையால் நிறைவேற்ற தொடங்கினார். சிறுமியாக இருந்த பார்வதி 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து பெங்களூருவில் சட்ட கல்லூரியில் படிப்பை முடித்தவர், இடைக்கால பயிற்சிக்காக ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது ஆலப்புழை ஆட்சியராக எஸ்.சுகாஸ் பணியாற்றினார். அந்த அலுவலகத்தில் அப்போது உதவி ஆட்சியராக கிருஷ்ண தேஜா பணியாற்றி வந்தார். அவர் அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது. அந்த விதையை மரமாக்க கடினமாக உழைத்த பார்வதி 2024ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 282ஆவது இடத்தை (ரேங்க்) பிடித்து வெற்றி பெற்றார்.

தற்போது எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். ஒரு கை பலத்தாலும், மன உறுதியாலும், கடின உழைப்பாலும், அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பார்வதி கோபகுமாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *