வாசிங்டன், மே 24– ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்கா வின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டிரம்பின் உத்தரவால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் நிலை கேள்விக்குறியானது. இந்த சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
பின்னணி
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்தும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.
இதனை அடுத்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.