கி.மு. 8 ஆம் நூற்றாண்டுவரையிலான கீழடியின்
தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!
வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி
புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!
தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!
வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி
புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!
கி.மு. 8 ஆம் நூற்றாண்டு நாகரிகத்தின் வெளிப்பாடு கீழடி என்ற தொல்பொருள் ஆய்வு – ஆரியத்திற்கு முற்பட்டது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ளாமல், புராண அகத்தியரை முன்னிறுத்துவது, ஆரிய – திராவிடப் போராட்டத்தின் தொடர்ச்சியே! திராவிடப் பண்பாடும், வரலாறும் மீட்டெடுக்கப்பட இன்னும் உறுதியோடு போராடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழர் வரலாறு – பண்பாட்டின் மீதான தனது வெறுப்பை மீண்டும் ஒரு முறை ஆளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.2,600 ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மை வாய்ந்த கீழடி நகர நாகரிகம் அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எழும் காழ்ப்பும், கோபமும் கொஞ்சநஞ்சமல்ல; ஆரியத்துக்கு மூத்த திராவிட நாகரிகத்தின் அறிவியல் சார்ந்த நிரூபணம் அவர்களுக்குத் தரும் அளப்பரிய ஆற்றாமையும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.
கீழடி ஆய்வை நிறுத்திட ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகள்!
2014-2015 ஆம் ஆண்டில் (முதல் ஆண்டு) கீழடியில், இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தொன்மைக்கான சான்றுகள் வெளிப்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஆய்வுகள் (2015-2016) நடைபெற்ற பின், கீழடியின் காலம் குறித்தும், தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வாழ்விடப் பகுதி கிடைத்த நிலையிலும், கீழடி ஆய்வை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியது ஒன்றிய அரசு.
மூன்றாம் ஆண்டு ஆய்வு நிறுத்தப்பட்டது. அதற்கும் வழக்கு தொடர்ந்து, ஆய்வு தொடரப்பட வேண்டும் என்று போராட வேண்டியிருந்தது! ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்பட்டார். அவரிடமிருந்து அகழாய்வுப் பணி பறிக்கப்பட்டு சிறீராம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமேல் கீழடியில் எதுவும் இல்லை என்று கூறினார். அதன்பின், தமிழ்நாட்டில் எழுந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்போது பத்தாவது ஆண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.
கோயில்களை ஆய்வதிலேயே கவனம்!
1939 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் வைகை நாகரிகமும், பொருநை நாகரிகமும் சிந்துவெளிக்கு இணையான தொன்மை படைத்தவையாக இருக்கக்கூடும் என்று அந்நாளைய இந்தியத் தொல்லி யல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் என்பவர் முன்னறிவித்திருந்தும், அது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. தமிழ்நாட்டில் கோயில்களை ஆராய்வதிலேயே தொல்லியல் துறை அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திராவிடப் பண்பாட்டின் தொன்மையை நிறுவும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் முடக்கி வைக்கப்பட்டே இருந்தன. இந்நிலையில் கீழடி ஆய்வுகள் தான் மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வு களின் முடிவுகளின் மூலம், இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கமே தமிழ்நாட்டிலிருந்து தான் என்னும் அளவுக்கு தொன்மைத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியது எத்தனை உண்மை என்பது தொடர்ந்து நிறுவப்பட்டுவருகிறது.
புராணமும், வரலாறும் ஒன்றா?
காலம் காலமாக இந்திய வரலாற்றின் தொடக்கமே வேத கால நாகரிகம் தான் என்றும், புராணங்களும், இதிகாசங்களுமே இந்திய வரலாறு என்றும் அளந்து விட்டுக் கொண்டிருந்தவர்களின் புளுகுகள் எல்லாம் சிந்துவெளி ஆய்வுகள் மூலம் அம்பலப்படத் தொடங்கின. தெற்கின் வரலாறு கீழடி ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியதும், மொத்தமாக அவர்களின் பொய்மூட்டைகள் அடியற்றுப் போயின. சிந்துவெளி ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்க முயல்கிறார்கள். கிருஷ்ணனுக்கு ஆதாரம் துவாரகைக் கடலுக்குள் தேடுகிறோம் என்கிறார்கள். ஆனால், கிடைத்த ஆதாரங்களை அழிக்கவும், மொத்தமாக இழுத்துமூடவும் முயல்கிறார்கள்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கிடப்பில் போட, ‘ஆதாம் பாலம்’, ‘இராமர் பாலம்’ என்ற ‘புரூடா!’ வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. ஆதாரம் தரவில்லை!
இந்நிலையில் பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 982 பக்க ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அதை வெளியிடாமல் இருப்பதைக் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராய்வதற்கான கூட்டம் வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், கீழடி அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொரு சதிச் செயலில் இறங்கியுள்ளது.
அறிக்கை வெளியிடுவதிலும்
ஒன்றிய அரசின் தாமதம்!
ஒன்றிய அரசின் தாமதம்!
முதல் இரண்டு ஆண்டுகளுக்கான கீழடி அகழாய்வு அறிக்கையை அந்தத் துறை சார்ந்த இரண்டு நபர்களிடம் கொடுத்து, சரிபார்க்கச் சொன்னதில், இவ்வறிக்கையில் கூடுதல் தகவல்கள் தேவை என்று அவர்கள் கேட்டிருப்பதாகவும், சிலவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறி, 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறிக்கையில் திருத்தங்களைச் செய்யச் சொல்லி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன், அதாவது அறிக்கை தரப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடிதம் அனுப்பியுள்ளது ஒன்றிய அரசின் தொல்லியல் துறை.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, கடந்த 2024 பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்குள் அறிக்கையை வெளியிடுவோம் என்று உறுதியளித்த ஒன்றிய அரசு, 15 மாதங்கள் ஆன பின்பு, இப்போது திருத்தம் கோரி திருப்பி அனுப்புகிறது என்றால், இந்த ஆய்வின் மீது ஒன்றிய அரசுக்கு இருக்கும் வெறுப்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கட்டுக்கதைகளைப் புறம்தள்ளி, ஆதாரக் குவியல்களுடனான ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவது – தங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று அஞ்சுகிறது ஆரியம்! தமிழின் தொன்மைக்கு எதிராக ஆரியக் கட்டுக்கதையான அகத்தியரை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.சும், ஒன்றிய பாஜக அரசும், கீழடியின் மீது காழ்ப்பு காட்டுவது ஏன்? ஏனெனில், இது அறிவியல் அடிப்படையிலான சான்று. அகஸ்தியர் கட்டுக்கதை – புராணப் புளுகுகளின் அடிப்படையில் கோரப்படும் ‘வெற்று நம்பிக்கை’ என்னும் அறுந்த கயிறு!
ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின்
பதில் கடிதம்!
பதில் கடிதம்!
கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரை கீழடியின் தொன்மைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று அறிக்கையில் கூறப்படும் தகவல் மிகையானதாகத் தெரிகிறது என்றும், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அளவில் வேண்டுமானால் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளது இந்தியத் தொல்லியல் துறையின் கடிதம். எத்தனை முரண்பாடு என்பதைப் பார்த்தீர்களா? எந்த ஆதாரமும் இல்லாத அகத்தியருக்கு விழா – சங்கமம் – கல்லூரி நிகழ்ச்சிகள் – ஆரவாரங்கள்! ஆனால், ஆதாரப்பூர்வமாக அறிவியல் ரீதியாக நிறுவப்படும் அறிக்கைக்கு ஆயிரம் தடைகள்! அறிக்கை தெளிவாகவே இருப்பதாகவும், திருத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதில் கடிதம் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களால் எழுதப்பட்டிருப்பதாக இன்று வந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கவிஞர் கனிமொழி கருணாநிதி, து.ரவிக்குமார் போன்றோர் அவையில் எழுப்பும் குரலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், சான்றோர் அவையிலும் நம்மைப் போன்றோரும், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் கனிமொழி மதி உள்ளிட்டோரும் எழுப்பும் குரலும், குறிப்பாகத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அறிவியல் ரீதியாக உண்மைகளை வெளிக் கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சிகளும் மக்களை இப் பிரச்சினையில் விழிப்புடன் வைத்திருக்கும் இந்தச் சூழலிலும் ஒன்றிய அரசு இத்தனைத் தடைகளை, இடைஞ்சல்களை ஏற்படுத்த முயல்கிறதென்றால், அவர்களின் உள்நோக்கம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது அல்லவா? இந்தியாவின் ஒற்றுமை, வரலாறு என்றெல்லாம் பேசுபவர்கள், அந்த வரலாறும் தொன்மையும் தமிழ்நாட்டில் இருக்கிறது – மதச்சார்பற்றதாக இருக்கிறது – ஆரியத் தொடர்பற்று இருக்கிறது என்றதும் அதை மறைக்க எத்தகைய நேர்மையற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் உறுதியோடு
நாம் போராட வேண்டும்
நாம் போராட வேண்டும்
திராவிடப் பண்பாடும், வரலாறும் மீட்டெடுக்கப்பட்டு, உண்மை வரலாறு எழுதப்பட இன்னும் உறுதியோடு நாம் போராட வேண்டும் என்பதைத் தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
இதுபற்றி ஒத்தக் கருத்துள்ளவர்கள் திரண்டு, முக்கிய பெருநகரங்களில் அறப்போர் நடத்த விரைவில் அறிவிக்கப்படும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.5.2025