அரபிக்கடலில் 22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மய்யம் தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 19– அரபிக் கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வரும் 22ஆம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

தமிழ்நாட்டில் மே 20ஆம் தேதி வரை மழை தொடரும். மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். இதனால் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக மே 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 21ஆம் ேததி வரை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். மே21ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள் மன்னார் வளைக்குடா அதையொட்டி குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *