புதுடில்லி, மே 18 இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக்கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கர வாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்வினை யாக அறிவிக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னமும் தொடா்கிறது என்கிறது இந்திய பாதுகாப்புத்துறை. மறுபுறம் மே7 ஆம் தேதி பன்யன்-அல்-மர்சூஸ் (திடமான மற்றும் உறுதியான கட்டமைப்பு) என்ற பெயரிலான தங்களின் ‘திருப்பித்தாக்கும் நடவடிக்கை தொடரும்’ என்று கூறியிருக்கிறது பாகிஸ்தான். சண்டை நிறுத்தம் மே 10 ஆம் தேதி அறி விக்கப்பட்டாலும் எல்லையில் போர் பதற்றம் இன்னும் ஓயவில்லை.
இதுநாள்வரை ஆக்கபூர்வ தேவைகளில் குறிப்பாக, விவசாயம், வானிலை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மட்டுமே இந்தியாவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு ஏதுவாக 2021 ஆம் ஆண்டில் ட்ரோன் விதிகள் உருவாக்கப்பட்டு 2022-இல் ‘ட்ரோன் சக்தி இயக்கம்’ மூலம் அவை ஒன்றிய அரசால் முறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்களில் ட்ரோன் தயாரிப்பு ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள், அவற்றின் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் உருவாகின.
ட்ரோன்கள் பலம்
ரஷியா- உக்ரைன் போரின்போது தாக்குதலுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட பிறகே ராணுவ ரீதியாகவும் ட்ரோன்களை பயன்படுத்தும் தேவையை இந்தியா உணர்ந்தது எனலாம். 2024 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் சுமாா் 2,000 முதல் 2,500 ட்ரோன்களை இறக்குமதி செய்து அவற்றை பாதுகாப்புப்படைகளில் இந்தியா இணைத்துக்கொண்டது. இதற்கு ஆன செலவினம் மட்டும் அமெரிக்க டாலா்கள் மதிப்பில் 421.69 மில்லியன் டாலர்கள் என்கிறது பாதுகாப்புத்துறை புள்ளிவிவரம்.
ஆயுதம் தாங்கிய ‘ட்ரோன்கள்’ இந்தியாவசம் உள்ளன
இதில் ‘சர்ச்சர்’ மற்றும் ‘ஹெரோன்’ ரகங்கள் இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் நிறுவனத் தயாரிப்புகள். அமெரிக்காவிடம் இருந்து ரூபாய் மதிப்பில் 400 கோடிக்கு எம்க்யூ-9 ரக அழிக்கும் ட்ரோன்களை வாங்கியிருக்கிறது இந்தியா. இவை தவிர, எதிரி இலக்கைத் துல்லியமாகத் தாக்கிய பிறகு தன்னையும் அழித்துக் கொள்ளும் இந்திய தயாரிப்பான நாகாஸ்திரா – 1, ரஷியாவின் ரஸ்டம் 2, ஆா்ச்சா் என்ஜி எனப்படும் ஆயுதம் தாங்கிய ‘ட்ரோன்கள்’ இந்தியாவசம் உள்ளன.
சமீபத்திய சண்டையின்போது எல்-70 ரக விமான எதிா்ப்பு சிறிய வகை நவீன பீரங்கி, இசட்யு 23 எம்எம் பீரங்கிகள், எஸ்-400 அம்சங்களைக் கொண்ட ‘சில்கா’ ரக வான் பாதுகாப்பு சாதனங்கள் போன்றவற்றை பாகிஸ்தா னுக்கு எதிராக பயன்படுத்தியதாக இந்திய பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் வைத்துள்ளது!
இந்தியா தனது ட்ரோன் திறன்களை 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகே மேம்படுத்திக் கொண்டது. மறுபுறம் பாகிஸ்தான் 2009 ஆம் ஆண்டிலேயே சீன ஒத்துழைப்புடன் புர்ரான் ரக ‘ட்ரோன்’ ஆயுதங்களை தயாரிக்கத் தொடங்கியது. அதன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஷாஃபார்’ ரக ‘ட்ரோன்கள்’, சமீபத்திய தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்டதை இந்திய பாதுகாப்பு நிபுணா்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவை தவிர, சீனாவிடம் இருந்து சிஎச்-4, கிங் லூங் ரக ‘ட்ரோன்கள்’, துருக்கியிடமிருந்து ஆசிஸ்காா்டு, பாய்ரக்தா் டிபி2, அகின்சி ரக ட்ரோன்களை ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் வைத்துள்ளது.
கோடிகளில் செலவினம்
இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் விசாரித்தவரை, கடந்த மே 7 – 9 ஆகிய தேதிகளில் நடந்த தாக்குதல்கள், அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மட்டும் தினமும் ரூ.1,460 கோடி முதல் ரூ.5,000 கோடிவரை செலவானதாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில் மூன்று நாள் செலவு ரூ. 4,300 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை ஆகியுள்ளதாக பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. கப்பலில் இருந்து தரைப்பகுதியில் இலக்கைத் தாக்கக்கூடிய இந்திய தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணை பயன்ப டுத்தப்பட்ட செலவினமும் இதில் அடங்கும்.
நடந்த சண்டையில் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ரஷிய தயாரிப்பு வெடிமருந்து ட்ரோன்களும் (காமிகேஸ்) நூற்றுக்கணக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர போர் விமானங்களை இயக்கும் செலவு, தள வாடங்கள், துருப்புக்களின் நடமாட்டம், மீட்பு நடவடிக்கைகள், போர் மற்றும் பாதுகாப்பு ஒத்திகை செலவு என கணக்கிட்டால் நிதிச்செல வினம் கடுமையாக இருக்கும் என வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
பொருளாதார ரீதியாக இந்த நான்கு நாள்கள் சண்டை, பல அழுத்தங்களை இரு நாடுகளுக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, சண்டை தொடங்கிய நள்ளிரவு முதல் மே 10 ஆம் தேதி வரை வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. 430-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பயணிகள் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மக்கள் மீது சுமை
இரு அண்டை நாடுகளுக்கு இடையே போரோ சண்டையோ நடக்கும்போது இப்ப டிப்பட்ட அழுத்தங்களைத் தவிா்க்க முடியாது. ஆனாலும், 1971-ஆம் ஆண்டில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் நேரடி போருக்குப் பிறகு அதே இரு நாடுகள் கிட்டத்தட்ட போரின் விளிம்புவரை சென்று கடைசியில் சண்டை நிறுத்தத்தை அறி வித்த நிகழ்வு அண்மையில்தான் நடந்துள்ளது.
அமெரிக்க வா்த்தகத்தடை அழுத்தம், பொருளாதார மந்தநிலைக்கு செல்லும் ஆபத்து போன்றவை கூட சண்டை நிறுத்தத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இரு நாடுகள் ஆயுத மோதலில் ஈடுபட்டால் தினமும் எவ்வளவு செலவாகும் என்பதும் அந்த நிதிச் சுமை மக்கள் மீதே திணிக்கப்படும் என்பதால், அதை எதிா்கொள்ள இரு தரப்புமே தயாராக இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் உணா்த்தியுள்ளன.
எடைத்திறன் – 1 டன் (ஏவுகணைகள், கேமரா, சென்சார்கள் உள்பட)
திறன் – உளவு கண்காணிப்பு, வான் ராடாா்
எம்க்யூ9 ஹன்ட்டர் கில்லர்
எடை – 1.7 டன் (ஏவுகணைகள், வெடி குண்டுகள் உள்பட)
திறன் – இரவு, பகல் கண்காணிப்பு, தாமே வெடித்துத் தாக்கும்.