சென்னை, மே 13- அரசுப் பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்களையும் திறம்பட தயார் செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு கல்வி துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது
பன்னாட்டுத் தரத்தில்…
மேலும் அரசுப் பள்ளிகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகளை பன்னாட்டுத் தரத்தில் கொண்டு வருவதற்கான கட்டமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகளின் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகளை எல்லாம் புதிதாகவோ சீரமைத்தோ ஸ்மார்ட் வகுப்பறைகளாக சென்னை மாநகராட்சி மாற்றியுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
இதனால், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாற்றப் பட்டு வருவதால், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற மோகம் குறைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த ஸ்மார்ட் வகுப்புகள் தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் அமைக்கப் பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் அதிகரித்து வருகிறது.
மேலும் பாழடைந்து இடிந்து கிடந்த கட்டடங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு தனியார் பள்ளிகளை போன்று மாற்றப் பட்டுள்ளது. மேலும் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி யுள்ளது. அதன்படி, பல்வேறு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அம்சங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
லட்சத்திற்கும் மேற்பட்ட…
அதாவது, சென்னை மாநகராட்சியில், 35 மேல்நிலை, 46 உயர்நிலை, 130 நடுநிலை, 206 தொடக்கப் பள்ளிகள் என, 417 பள்ளிகள் உள்ளன. இங்கு, எல்.கே.ஜி., யூ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மழலையர் பள்ளியில் காற்றோட் டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப்பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தை துாண்டும் வண்ண மயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ஊக்கத் தொகை
பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.
தற்போது, ஆட்டோக்களில் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்யப் படுகிறது. தவிர பள்ளிகளின் அருகில் உள்ள தெருக்கள், வீடுதோறும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சென்று மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் எதிரொலியாக, மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, தேர்ச்சி விகிதம் உயர்வு, மற்றும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கல்வித் தரத்தில் அதிகப்படியான முன்னேற்றம் காணப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் 90,000 ஆக இருந்த சேர்க்கை, 2021-2022 கல்வியாண்டில் 1,15,580 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, பல புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர், இதனால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.12 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.
சில பள்ளிகளில் 98 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதம் காணப்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது கல்வித் தரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை என்பது இருமடங்கு அதிகமாகும்.