‘ஏரி மனிதர்’ தூர்வாரிய குளங்கள்!

viduthalai
2 Min Read

நன்றி தெரிவித்த கிராம மக்கள்!

தஞ்சாவூர், மே 12- ஒக்கநாடு மேலையூரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 2 குளங்களை, ‘தமிழ்நாட்டின் ஏரி மனிதன்’ என்று போற்றப்படும் நிமல் ராகவன் குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் 20 நாள்களில் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் ஒப்படைத்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பாராட்டு தெரிவித்தார்.

குளம் ஆக்கிரமிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாரம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் 4.2 ஏக்கர் பரப்பளவில் 2 குளங்கள் உள்ளன. இவற்றில் ஒரு குளம் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், பல ஆண்டுகளாக அவை தூர்வாரப்பாடாமல் இருந்துள்ளன. இதிலும் மற்றொரு குளம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், இவ்விரு குளங்களையும் மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் அடிப்படையில், முரசொலி, நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்து வரும் பேராவூரணி நாடியம் கிராமத்தை சேர்ந்த, ‘தமிழ்நாட்டின் ஏரி மனிதன்’ நிமல் ராகவனை தொடர்பு கொண்டு, ஒக்கநாடு மேலையூரில் உள்ள குளங்களை தூர்வாரித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி நிமல் ராகவன் குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் ரூ.3 லட்சம் செலவில் 20 நாள்களில் குளங்களை தூர்வாரியுள்ளார்.

கிராம மக்கள் பாராட்டு

இதன் மூலமாக, பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடந்த குளமும், ஆக்கிரமிப்பில் இருந்த குளமும் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டன. இதனை, 7.5.2025 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, 20 நாள்களில் இரண்டு குளங்களை தூர்வாரிய நிமல் ராகவன் குழுவினருக்கு முரசொலி மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரைகளில் மரக்கன்றுகள்

இது குறித்து நிமல் ராகவன் கூறுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறேன். இதுவரையில் 257 நீர் நிலைகளை சீரமைத்துள்ளேன். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூரில் உள்ள குளங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வேண்டுதலின் கீழ், 20 நாள்கள் பணிகள் மேற்கொண்டு முற்றிலுமாக சீரமைத்து மீட்டெடுத்துள்ளோம்.

சுமார் 4.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில், 6 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். குளத்திலிருந்து, தூர்வாரும் மண்ணை வெளியில் கொண்டு செல்லாமல், கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகளும், பனை விதைகளும் நடப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *