புதிய சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை, மே 11- சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 அவசர கால சேவை மய்யத்தில் 2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ‘நட்புடன் உங்களோடு 14416’ என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறுவதற்காக மா. சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.
இதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் ஒன்றாக 2020-2021ஆம் ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனைகள் குறிப்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதற்காக 104 என்கிற கட்டணம் இல்லா தொலைபேசி எண் தொடங்கப்பட்டது. அந்த நாள் முதல் நீட்தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள் என அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் 2021-2022ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைக்கப்பட்டது. நட்புடன் உங்களோடு எனும் தலைப்பில் தொடங்கப்பட்ட மனநல ஆலோசனை மய்யம் 24 மணி நேரமும் டிஎம்எஸ் வளாகத்தில் 14416 எனும் எண்ணுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது 104 என்கின்ற எண்ணும் இதோடு இணைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் மனநல ஆலோசனைகள் வேண்டுமோ? என்று அறிவிக்கப்பட்டு அந்தவகையில் இந்த சேவை மய்யம் மிகச் சிறப்பாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12ஆம் தேர்வினை பொறுத்தவரை 7,92,494 மாணவர்கள் எழுதி இருந்தார்கள். இதில் 31,352 மாணவர்கள் அதாவது 25,508 ஆண்கள், 13,844 பெண்கள் என 39,352 மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 39,352 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் அந்த பட்டியலை பள்ளி கல்வித்துறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டு பெற்று அந்த மாணவர்களுக்கு தனித்தனியே மனநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மனநல ஆலோசனைகளைப் பொறுத்தவரை மாணவர்களுடைய மனநிலையை உறுதிப்படுத்துவது, மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு சிலர் தேர்ச்சி பெற தவறியமைக்காக தங்களது குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, வெறுப்பது போன்ற செயல்களை தடுத்திட அவர்களுக்கும், அறிவுறுத்தல் வழங்கப்படுவது என்று இந்த சேவை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சேவை 14416, 104 ஆகிய இரண்டு எண்களும் நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற வகையில் பணி செய்து கொண்டிருக்கிறது. இந்த மய்யம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது. 70 மனநல ஆலோசகர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். 8 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மனநல மருத்துவரை கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் நேற்று (10.5.2025) மற்றும் இன்று வரை 67 பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 67 பேருக்கு மீண்டும் மீண்டும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் முழுமையாக மன உளைச்சலை அகற்றி மனநலன் பெறும் வகையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.