பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

viduthalai
2 Min Read

ராஜஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

ஜெய்ப்பூர், மே 9  ராஜஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

மேலும் ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவசர நிலை பிரகடனம்

அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதலமைச்சர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் எச்சரிக்கை நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால் நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை எரிய செய்யக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்த உதவுவேன்

சொல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாசிங்டன், மே.9- இந்தியா-பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில், என்னால்  உதவ முடிந்தால், நிச்சயம் உதவுவேன்.  என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

மோதல்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. நேற்று முன்தினம் (7.5.2025) பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரில் உள்ள பயங்கரவாதிகளின் இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பாகிஸ்தானும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் அப்பாவிகள் பலியானார்கள்.

இந்நிலையில், இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியு பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

நிறுத்த வேண்டும்

அதற்கு டிரம்ப் கூறியதாவது:- இந்தியா-பாகிஸ்தான் மோதல் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இரு நாடுகளுடனும் இணைந்து பயணித்து வருகிறேன். இரு நாடுகளையும் எனக்கு நன்றாக தெரியும். பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. மோதலை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இப்போது மோதலை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

இரு நாடுகளுடனும் எனக்கு நட்புறவு இருக்கிறது. இப்பிரச்சினையில் என்னால் ஏதேனும் உதவ முடிந்தால், நிச்சயம் உதவுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்க ராணுவ பசிபிக் பிராந்திய உயர் அதிகாரி ரொனால்டு கிளார்க் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இப்போதே இதுபற்றி எந்த கருத்தும் கூற முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *