நமது ‘குடிஅரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது‘குடிஅரசு’ தோன்றிய நாள் முதல் இது வரையிலும் தனது கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், உழைத்து வருவதற்குக் காரணம், யாருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதேயாகும் ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட எந்தப் பத்திரிகையாகட்டும், எந்த ஊழியராகட்டும், பிறருடைய தயவு தாட்சண்யத்திற்குக் கட்டுப்படாமலிருந்தால் தான் கொள்கைக்காக உழைக்க முடியும் என்ற தத்துவத்திலிருந்து சிறிதும் பிசகாமலே ‘குடிஅரசு’ இது வரையிலும் இருந்து வருகிறது.
எண்ணற்ற எதிர்ப்புகளிருந்தும் ‘குடிஅரசு’ பொது ஜனங்களின் கவனத்தை நாளுக்கு நாள் எதிர் பார்ப்பதற்கு அதிகமாகவே கவர்ந்து வருவ தற்கு அதன், அசைக்கமுடியாததும், பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும் உண்மையில் நாட்டில் சமதருமத்தை யுண்டாக்கத் தகுந்ததும் ஆகிய கொள்கைகளே காரணமாகும் என்று நாம் கூறுவது மிகையே யாகும்.
ஆரம்பத்தில், ‘குடிஅரசை’த் தங்களுடைய தேர்தல் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள் ளாலாமென்று கருதி அதன் கொள்கைகளை ஒப்புக் கொள்வது போலச் சிலர் நடித்து வந்தார்களானாலும், நாளடைவில் அவர்கள் ‘குடிஅரசின்’ உண்மைக் கொள்கைகளையும் அது யாருடைய தயவையும் போற்றுதல், தூற்றுதல்களையும் எதிர்பார்ப்பதல்ல என்பதையும் அறிந்த பின் “குடிஅரசு” படிப்பதையும் அதன் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டதோடு மாத்திரமல்லாமல் மறைமுகமாகச் சிலர் எதிர்ப்பிரசாரங்கூடச் செய்ய ஆரம்பித்தார்கள் என்னும் விஷயம் ‘குடிஅரசு’ வாசகர்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம் இப்படி இருந்தும் ‘குடிஅரசி’ன் கொள்கைகளுக்கும் ‘குடிஅரசு’க்கும் ஒரு குறைவும் உண்டாகவில்லை.
வைதிகர்களும், பார்ப்பனர்களும், காங்கிரஸ் காரர்களும் ‘குடிஅரசை’ உபயோகப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் ‘குடிஅரசை’ ஒழிக்கப்பாடுபட்டாலும், ஆரம்பத்தில் ‘குடிஅரசி’ன் சீர்திருத்த கொள்கைகளை ஆதரித்து வந்த பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களும், மந்திரிமார்களும் ‘குடிஅரசை’ ஆதரிக்கவும், சுயமரியாதைக் கூட்டங்களுக்கு வரவும் பயந்து ஒதுங்கியிருந்தாலும் பணக்காரர்களில் சில உண்மையான சுயமரியாதைப் பற்றுடையவர்களைத் தவிர மற்ற எல்லாப் பணக்காரர்களும் ஜமீன் தார்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் இவர்களுடைய கையாட்களாக வேலை செய்யும் ராஜ்யவாதிகளும் ‘குடிஅரசு’க் கொள்கையை முந்திய ஆண்டுகளைவிடச் சென்ற ஆண்டில் அதிகமாக எதிர்த்துப் போராடினாலும் அதன் வேலை சென்ற ஆண்டிலேயே அதிகமாக நடைபெற்றிருக்கிறது என்று தைரியமாகவே கூறவேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை மகாநாடுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சென்ற ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, காரைக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, பொறையாற்றில் ஒரு சுயமரியாதை மகாநாடு, நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, லால்குடியில் இரண்டு சுயமரியாதை மகாநாடுகள், விருதுநகரில் மாகாணச் சுயமரியாதை மகாநாடு, நாகப்பட்டிணத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, சென்னையில் ஒரு சுயமரியாதை மகாநாடு ஆக பத்து, சுயமரியாதை மகாநாடுகள் நடந்தியிருக்கின்றன. இவைகளைத் தவிர நாடெங்கும் நடைபெற்றுள்ள பொதுக்கூட்டங்கள் எண்ணற்றவை. இந்த மகாநாடுகளின் பயனாலும் பொதுக் கூட்டங்களின் பயனாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுயமரியாதையியக்கத்தின் உண்மைக் கொள்கைகளையறிந்து, அவைகளைக் கூடிய வரையிலும் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் யார் மறுக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் ‘குடிஅரசின்’ அச்சமற்ற ஊழியம் அன்றோ காரணம்.
சுருங்கக் கூறவேண்டுமானால் சென்ற ஏழாண்டுகளாகக் “குடிஅரசு” தனது கொள்கையை விட்டு நழுவாமலும் யாருடைய தயவுக்கும் கட்டுப்படாமலும், எவருக்கும் அஞ்சாமலும், உழைத்து வந்ததன் பலன் வீண் போகாமல் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் ஆரம்பத்தில் அதன் கொள்கைகளில் நம்பிக்கையில்லாமலிருந்தவர்கள் கூட அதன் கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பின்பற்றவும் முன் வருகிறார்கள் என்ற உண்மையை அறியும் போது ‘குடிஅரசும்’ அதன் வாசகர்களும், பெருமையும் மேலும் மேலும் உறுதியோடும், அஞ்சாமையோடும் பிரசாரம் பண்ணுவதில் ஊக்கமும், தைரியமும் அடைய வேண்டுமேயொழிய வேறு தளர்ச்சியோ, கவலையோ படவேண்டிய அவசியமில்லையென்றே நிச்சயமாகக் கூறுவோம்.
மற்றொரு விஷயத்தையும் ‘குடிஅரசின்’ வெற்றிக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் சென்ற நாலைந்து மாதங்களாக நமது ஆசிரியர் நமது நாட்டில் இல்லாமல் மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்காக தோழர் இராமநாதன் அவர்களுடன் சென்றிருந்தும் ‘குடிஅரசி’ன் வளர்ச்சியில் ஒரு விதமான குறைவும் ஏற்படவில்லை என்பதைக் கொண்டும் அதன் கொள்கைக்குத் தேசத்தில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறியலாம்.
இனி எதிர்காலத்தில் சென்ற ஆண்டுகளைவிடக் “குடிஅரசின்” வளர்ச்சியும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவும் அதிகப்படும் என்றே எதிர்பார்க்கிறோம் நமது ஆசிரியர் ஈ. வெ. ராமசாமி அவர்களும், தோழர்
எஸ். ராமநாதன் அவர்களும் மேல் நாட்டினர் மத சமுதாய விஷயங்களில் எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதையும், அவ்வாறு முன்னேறியிருப்பதற்குக் காரணங்கள் என்ன என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு மேல் நாடுகளில் இப்பொழுது சுற்றுப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சுற்றுப் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தவுடன் ‘குடிஅரசின்’ கொள்கைக்காக வேண்டி இன்னும் அதிதீவிரமாக உழைப்பார்கள் என்பதில் அய்யமில்லை. ஆகவே இனி வருங்காலத்தில் பொது ஜனங்களின் கவனமும், வாசகர்களின் ஆதரவும் ‘குடிஅரசி’னிடமும் அதன் கொள்கைகளிடமும் அதிகமாகவே ஏற்படுமென்று உறுதியாக நம்புகின்றோம்.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 01.05.1932
(நிறைவு)