மதத்தின் பெயரால் மரணத்தை அனுமதிக்க முடியாது!

viduthalai
3 Min Read

 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 3 வயது சிறுமி ஜெயின் மத வழக்கமான ‘சந்தாரா’ சடங்கின் கீழ் உணவு உட்கொள்ளாமல் இருந்து, அந்த சிறுமி  உயிரைத் தியாகம் செய்ததாக கூறி உயிரிழந்த பெற்றோருக்கு ஜெயின் சமூகத்தினர் பாராட்டி விழா நடத்தியுள்ளனர்

வியானா ஜெயின் என்ற பெயருடைய அந்த மூன்று வயது சிறுமி, மூளையில் கட்டி வந்து அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தூர் ரன்சித்து ஹனுமான் கோயில் பகுதியைச் சேர்ந்த அவரது பெற்றோர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள். இவர்கள் ஒரு ஜெயின் மதத் துறவியின் ஆலோசனையின் பேரில், அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் மகளை ‘சந்தாரா’ எனப்படும் உண்ணா நிலையை கடைப்பிடிக்க ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது.

இந்த சடங்கின்படி, கடந்த மார்ச் 21 அன்று சிறுமி வியானா உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வதை நிறுத்தியுள்ளார்; இதன் பிறகு சில நிமிடங்களிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

சந்தாரா’ என்பது ஜெயின் மதத்தில் பின்பற்றப்படும் ஒரு பழக்கமாகும், இதில் ஒருவர் தானாக முன்வந்து உண்ணா நிலை கடைப்பிடிக்க உயிரைத் துறப்பாராம்; இது ஆன்மிக சுத்திகரிப்பு மற்றும் உலகப் பற்றுகளை விடுவிப்பதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறதாம்.

உலகில் சிறுமி வியானா மட்டுமே மிக இளம் வயதிலேயே ‘சந்தாரா’ சடங்கை மேற்கொண்டவர் என்று உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜெயின் சமூகத்தினர் பெற்றோருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்

இது மிகவும் கொடூரமான மூடநம்பிக்கை – கொலையே! ஆனால் இது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை

‘சந்தாரா’ சடங்கு சட்டப்படி சரியா தவறா என்பது குறித்த விவாதங்கள் ஏற்ெகனவே உள்ள நிலையில், இந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. கடந்த காலங்களில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ‘சந்தாரா’வை தற்கொலைக்குத் தூண்டும் செயல் என்று கூறி தடை விதித்திருந்தது.

பொதுவாக குழந்தைகளுக்குக் கருவில் இருக்கும் போது தாய்க்கு உள்ள மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்குப் பெருமூளை வாதம் மற்றும் நரம்பு தொடர்பான சில குறைபாடுகள் ஏற்படுவது இயல்பே! தற்போதுள்ள மருத்துவத்தில் இதற்கான சிகிச்சை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

குழந்தையாக இருக்கும் போதே இக்குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு நோய் முழுமையாக குணமடையும் வகையில் நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு மற்றும் மாநில மனவள பயிற்சி மய்யத்தில் செவித்திறன் குறைபாடு,  ‘ஆட்டிசம்’ மற்றும் பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஆரம்பப் பயிற்சி மய்யத்தில் (கலைஞர் கருணாநிதி நகர் – தொலைபேசி எண். 044-24744732/24719942) சிகிச்சை முறை மற்றும் பெற்றோர்களுக்கு இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனிக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வுப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இது தமிழ் நாட்டின் நிலை, வடக்கிலோ இப்படி மதத்தின் பெயரால் ‘படுகொலை!’

மதக் காரணம் என்பதால் இத்தகைய நிலைப்பாட்டை மரணம் என்று சொல்லி ஒதுங்கிச் செல்ல முடியாது – உண்மையிலேயே இது ஓர் படுகொலைதான்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டது மதம் என்று அரசமைப்புச் சட்டத்திலும் இல்லை – மனிதநேயக் கண்ணோட்டத்திலும் இல்லை என்பதுதான் உண்மை – நூற்றுக்கு நூறு உண்மை.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 51a(h) நன்கு குறட்டை விட்டு உறங்குகிறதா?

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *