நமது ‘குடிஅரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளி வருகிறது. நமது ‘குடிஅரசு’ பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள். நமது ‘குடிஅரசு’ மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
புரோகிதப்புரட்டில்…
முதலில் புரோகிதப்புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது.
இரண்டாவது, மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும் பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று.
மூன்றாவது, மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான, அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள் முதலியவர்களின் சூழ்ச்சிகளையும், மோசங்களையும் வெளிப்படுத்திற்று.
கடைசியாக, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம் மறுபிறப்பு முதலியவற்றில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும், இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்த மற்ற தன்மைகளையும் வெளிப்படுத்தியது.
மேற்கூறிய விஷயங்களைப் பிரசாரம் பண்ண நாம் எல்லா மதங்களையும் தாக்க வேண்டியதிருந்தது. மதங்களைத் தாக்காமல் மேற்கூறிய காரியங்களைச் செய்யவே முடியாது.
மதங்களையும் அடியோடு
அழித்தே ஆகவேண்டும்
அழித்தே ஆகவேண்டும்
‘கடவுள்’, ‘வேதம்’, ‘ஆன்மா’, ‘மோட்சம்’, ‘நரகம்’, ‘மறுபிறப்பு’, ‘அவதாரம்’ ஆகிய புரட்டுகள் எல்லா வற்றையுமோ, அல்லது இவைகளில் சிலவற்றையோ, அல்லது பலவற்றையோ, அல்லது ஒன்றையோ அஸ்திவாரமாகக் கொண்டிராத மதமே உலகில் இல்லை.
ஆகவே மேற்கூறிய அஸ்திவாரங்களையெல்லாம் அகழ்ந்தெறிய வேண்டுமானால் மதங்களையும் அடியோடு அழித்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்தது.
பெண்களின் சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும், “குடிஅரசு” செய்திருக்கும் அவ்வளவு வேலை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையும் செய்ததில்லையென்று தோள்தட்டிக் கூறலாம். இன்று நமது நாட்டில் நடைபெறும் எந்தப் பெண்கள் கூட்டத்திலும் சுயமரியாதைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்குக் ‘குடிஅரசின்’ பிரசாரமே காரணமாகும்.
‘குடிஅரசு’ இவ்வாறு மத விஷயத்திலும், சமுக விஷயத்திலும், பங்கு எடுத்துக் கொண்டதோடு மாத்திரம் நிற்காமல் அரசியல் விஷயத்திலும் மக்கள் ஏமாறாமலிருக்கு மாறு அடிக்கடி எச்சரிக்கத் தவறவில்லை.
சமதரும ராஜியம்
அரசியல்வாதிகளின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும், தாட்சண்யமில்லாமல் பொது ஜனங்களுக்குக் கூறி வந்தது. இதன் பலனாகத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குப் பொது மேடைகளில் இடங்கிடைக்காத நிலைமை யும் உண்டாயிற்று இன்று தென்னாட்டில் வருணா சிரமதருமிகளுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் செல்வாக்கு இல்லாமலிருப்பதற்குக் காரணம் ‘குடிஅரசின்’ பிரச்சாரமேயாகும். சுருங்கக் கூறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மதப் பிரசாரத்தையும் வருணாசிர தருமப் பிரசாரத்தையும், முதலாளி ஆதிக்க பிரச்சாரத்தையும் ஆரம்ப முதல் இன்று வரையிலும் வெட்ட வெளிச்சமாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமல் இருக்கும்படி செய்து வருவதும் இக்காரணங்களில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை அடியோடு அழித்தால் ஒழிய நமது நாட்டுக்குச் சமதரும ராஜியம் கிடைப்பதற்கு வழியில்லை என்று பிரசாரம் பண்ணி வருவதும் நமது ‘குடிஅரசு’ ஒன்றேயாகும். இவ்வாறு ‘குடிஅரசு’ மத விஷயத்திலும், சமுக விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் உள்ள சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் இதற்கு உண்டான எதிர்ப்புகள் எண்ணற்றவை.
‘மத பக்தர்’கள் எல்லோரும் ‘குடிஅரசு’ வாலிபர் களையெல்லாம் கெடுக்கிறதென்றும், குடிஅரசு பெண்களையெல்லாம் கெடுத்து விடுகிறது என்றும், ‘குடிஅரசு’ப் பிரசாரத்தால் உலகமே முழுகிப் போய் விடுமென்றும், மறுபடியும் ‘கடவுள்’ அவதாரம் பண்ணித்தான் ‘குடிஅரசை’யும் அதை ஆதரிக்கும் சுயமரியாதைக்காரர்களையும் தொலைக்க வேண்டு மென்றும், ஊர் ஊராகப் பிரச்சாரம் பண்ணினார்கள்; பத்திரிகைகளில் எழுதினார்கள்; புதிய பத்திரிகைகளும் ஆரம்பித்து நடத்தினார்கள்; அவர்கள் நம்பும் ‘ஆண்டவனை’ நோக்கித் ‘தவமும்’ கிடந்தார்கள்.
அதிதீவிரச் சீர்திருத்தம்
இரண்டாவது, குடிஅரசு தோன்றுவதற்குமுன் சமுகச் சீர்திருத்தக்காரர்களாக விளங்கி வந்தவர்க ளெல்லாம் ‘குடிஅரசை’க் கண்டு நடுநடுங்கினார்கள். ‘குடிஅரசு’ சீர்திருத்த விஷயத்தில் அளவு கடந்து செல்லுகிறதென்றும், இவ்வாறு சென்றால் உள்ள சீர்திருத்தமும் அழிந்து விடும் என்றும் மதங்களையெல்லாம் அழித்துவிட்டுச் சீர்திருத்தம் பண்ணுவது முடியாத செயலென்றும், ஆப்கானிஸ்தானத்தில் மாஜி அரசர் அமனுல்லா கான் அதிதீவிரச் சீர்திருத்தம் செய்ய முயன்றதனால் ராஜ்ஜியத்தை இழக்கும்படி நேர்ந்ததைப் போல ‘குடிஅரசு’க் கொள்கையும் மதிப்பிழந்து புறக்கணிக்கப்படுமென்றும், பலவாறாக பயமுறுத்தல் பிரசாரமும் அவதூறுப் பிரசாரமும் பண்ணினார்கள்.
மூன்றாவதாகப் பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர் களும் பொறாமைக்காரர்களும் ‘குடிஅரசை’ ஒழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகள் எண்ணத் தொலை யாதவை ‘குடிஅரசை’த் தேசத் துரோகப் பத்திரிகையென்றும் அரசாங்கதாசப் பத்திரிகை யென்றும், ஜாதித்துவேஷப் பத்திரிகையென்றும், நாஸ்திகப் பத்திரிகையென்றும், பலவாறு பொது மக்களிடம் பிரசாரம் பண்ணினார்கள். ‘குடிஅரசு’ பொது உடைமைப் பிரசாரம் பண்ணுகிறதென்றும், ஆகையால் அதையும் அதைச் சேர்ந்த கூட்டத்தாரை யும் அடக்காவிட்டால் நாட்டில் கலகமும் கொள்ளையும் உண்டாகுமென்றும், அரசாங்கத்தாரிடமும், பொது மேடைகளிலும் வெளிப்படையாகவும், மறைமுகமாக வும் பிரசாரம் பண்ணினார்கள்.
தேசிய சுயமரியாதை
அதிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில், அதற்கு முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் ‘குடிஅரசை’யும் அதன் மூலம் உண்டான சுயமரியாதை இயக்கத்தையும் அழிக்கப்பாடுபட்டவர்களின் முயற்சி மிகவும் அதிகம் என்றே கூறவேண்டும், நமது நாட்டில் உப்புச் சத்தியாக் கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் ஈடுப்பட்ட பார்ப்பனர் களும், சில பார்ப்பனரல்லாதாரும் ‘குடிஅரசை’ப் பற்றியும் ‘குடிஅரசை’ ஆதரிப்போரைப் பற்றியும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மேடையிலும், கூட்டத்திலும், நாள் தவறாமல், நாழிகை தவறாமல், அவதூறுப் பிரசாரம் பண்ணினார்கள். நம்மவர்களுக் குள்ளேயே சிலர் புத்தி தடுமாற்றத்தினாலேயோ அல்லது சுய நலத்தினாலேயோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலேயோ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டும், ‘தேசிய சுயமரியாதை’ என்ற புதுப் பெயர் வைத்துக் கொண்டும் ‘குடிஅரசை’யும் சுயமரியாதை இயக்கத்தையும் எதிர்த்தார்கள் இவ்வாறு எவ்வளவுபாடுபட்டுங்கூட அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைச் சிறிதளவு குறைக்க முடிந்ததேயொழிய வேறு இந்த இதன் கொள்கைகளின் நமது எதிரிகளால் ஒரு உரோமத்தைக் கூட அசைக்கமுடியவில்லை என்பது வாசகர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.
(தொடரும்)