ஒன்றிய பிஜேபி அரசின் நிபந்தனைகளால் எண்ணூர் அனல் மின் நிலையப் பணி முடக்கம் தமிழ்நாடு மின் வாரியமே செயல்படுத்த முடிவு

viduthalai
2 Min Read

சென்னை, மே 06 எண்ணூர் விரிவாக்க மின் திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

எண்ணூர் அனல்மின் நிலையப் பணி

சென்னையை அடுத்த எண்ணூரில் தலா 660 மெகாவாட் திறனில் 2 அலகு விரிவாக்க அனல்மின் திட்டங்களை மின்வாரியம் அமைக்கிறது. இதனுடன், எண்ணூர் சிறப்பு 1,320 மெகாவாட், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 1,320 மெகாவாட் திறன் உடைய அனல்மின் திட்டங்களுக்கு, பொதுத் துறையைச் சேர்ந்த மகாநதி, சிங்கரேணி நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.

எண்ணூர் விரிவாக்க மின்நிலைய கட்டுமானப் பணியை லேன்கோ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக கடந்த 2014-ஆம் ஆண்டு மின்வாரியம் தொடங்கியது. அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கடந்த 2018-ஆம் ஆண்டு பணிகள் முடங்கின. பின்னர், ரூ.4,442 கோடியில் எஞ்சிய பணிகளை தொடர பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்துக்கு 2022-ஆம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் பணிகளை தொடங்காததால் ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எனவே, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

மின்வாரியமே செயல்படுத்த முடிவு

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொது மற்றும் தனியார் முறையில் மின்திட்டத்தை செயல்படுத்தும் போது, நிலக்கரி ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கப்படாது என ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எண்ணூர் விரி வாக்க மின்திட்டத்தை ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத் தினால் மட்டுமே நிலக்கரி ஒதுக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை மின்வாரியமே நேரடியாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”  இவ்வாறு அவர்கள் கூறினார்.

பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்

சென்னை, மே 6 பி.இ., பிடெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சேர்க்கைக்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என்றும், ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என்றும் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *