இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும்
229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை, மே 6- இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் மீது தாக்குதல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக தமிழ்நாட்டு மீன வர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2ஆம் தேதி நாகப்பட் டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 நாட்டுப்படகுகள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப் பட்டனர்.
ஜி.பி.எஸ். கருவிகள், கைப்பேசிகள், அய்ஸ் பெட்டிகள், எந்திர பாகங்கள், சுமார் 470 கிலோ மீன்பிடி வலைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற உடைமைகளும் பறிக்கப்பட்டன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், தாக்குதல் நடத்தியவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடம் இப்பிரச்சினையை எடுத்துச்சென்று உரிய தீர்வு காண வேண்டும்.
படகுகள் பறிமுதல்
கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்திய மீனவர்களிடமிருந்து இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 34 மீன்பிடிப் படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்க உள்ளதாக தெரிகிறது. இதை தவிர்க்க தமிழ்நாட்டு -மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான 229 மீன்பிடிப்படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 12 மீன்பிடி படகுக ளுடன் 101 மீனவர்களையும், 14 மீட்புப் படகுகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அனுப் பியுள்ள கருத்துருவிற்கு விரைவில் வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
நடவடிக்கை
இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப்படகுகளை சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப்படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.