புதுடில்லி, மே 4 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த மோசடி சம்பவங்கள், குறிப்பாக கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இந்திய மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
2024-2025 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 26 எம்பிபிஎஸ் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள். கருநாடகாவில் உள்ள கெம்பேகவுடா மருத்துவ அறிவியல் நிறுவனம் (KIMS), பெங் களூரு மற்றும் ஏஜே மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மய்யம், மங்களூரு ஆகியவற்றில் சேர்ந்த இரு மாணவர்களின் இடங்கள் ரத்து செய்யப்பட்டன.
மாணவர்களுக்கு தடை
42 மாணவர்கள் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டு களுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மாணவர்கள் 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்பட்டுள்ளனர். 215 மாணவர்களின் தேர்வு முடிவுகள், தற்போதைய விசாரணை யின் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. 2024 மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், கேள்வித்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை மய்யமாகக் கொண்டு நடந்ததாக சிபிஅய் விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.
முறைகேடுகள்
67 மாணவர்கள் 720/720 என்ற முழு மதிப்பெண்ணைப் பெற்றது மற்றும் சிலர் 719 போன்ற சாத்தியமற்ற மதிப்பெண்களைப் பெற்றது முறைகேடு சந்தேகத்தை எழுப்பியது.
பீகாரின் பாட்னாவில் உள்ள ஒரு பள்ளி மற்றும் ஆண்கள் விடுதியில், தேர்வுக்கு முந்தைய இரவு 35 மாணவர்களின் விடைத்தாள்கள் நிரப்பப்பட்டு மறுநாள் தேர்வு எழுதியதாக காண்பிக்கப்பட்டு தேர்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது இதில் பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் முகியா என்பவர் இந்த மோசடியின் முக்கிய மூளையாகக் கருதப்படுகிறார். இவர், ஒரு மாணவருக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கேள்வித்தாளை வழங்கினார்
40 பேர் கைது
பீகார், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 58 இடங்களில் சி.பி.அய். ஆய்வு செய்து, 40 பேரை கைது செய்துள்ளது.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் (PMCH) சேர்ந்த மேனாள் மாணவர் டாக்டர் அஜய் குமார் சிங், நீட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து எரிக்கப்பட்ட ஓ.எம்.ஆர். தாள்கள் மற்றும் நீட் அனுமதி அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் கல்வி அறக் கட்டளையின் தலைவர் தீக்சித் படேல், வினாத்தாள்களை மாற்றி மதிப்பெண்களை உயர்த்துவதற்காக பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பான இந்த மோசடிகள் நீட் தேர்வு முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக் கியுள்ளன.