தெருநாய்களை
கட்டுப்படுத்த நடவடிக்கை!
கட்டுப்படுத்த நடவடிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மே 4- தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன் விவரம் பின்வருமாறு;
* அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு
* கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மய்யங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும்.
* நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும்படி ஓட்டுநர், நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது
அமைச்சர் சா.சி.சிவசங்கர் எச்சரிக்கை
சென்னை, மே 4- போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடிதங்கள் வாயிலாக வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறுதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்.
பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ, தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி, இறங்க சிரமம் ஏற்படுத்துக் கூடாது. நடத்துநர் வேண்டும் என்றே, பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச் சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துநர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.
சாதாரண பயணிகள் மாற்றுத் திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதான் தேசியக் கல்விக் கொள்கையா?
மாணவர்களை இடைநிறுத்தம் செய்து குலத் தொழிலுக்கு அனுப்ப முயற்சி
தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை, மே 4- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு மறைமுகமாக குலத்தொழிலை திணிக்க முயற்சிகள் நடைபெறுவதாக அண்மையில் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் 2.5.2025 அன்று பேசிய அவர் தேசிய கல்விக் கொள்கையின்படி அய்ந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலிருந்து மாணவர்களை தடம் மாற்றி குலத்தொழிலுக்கு அவர்களைத் திருப்பும் நோக்கம் கொண்டவையாக இருப்பதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சபாஷ் சரியான நடவடிக்கை!
சாலையை ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு
சென்னை, மே 4- சென்னை அருகே ஆவடியில், திருமுல்லைவாயலில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு கோயில், போக்குவரத்து இடையூறு மற்றும் பொது பாதுகாப்பு காரணங்களால் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.
திருமுல்லைவாயல் பகுதியில், பிரதான சாலையை ஆக்கிரமித்தவாறு கட்டப்பட்டிருந்த இந்தக் கோயிலை சென்னை மாநகராட்சி அகற்ற முடிவு செய்தது.
முன்னதாக, கோயில் நிர்வாகத்திற்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது இருப்பினும் உடன்பாடு எட்டப்படாததால், இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு, ஜேசிபி இயந்திரங்களுடன் கோயில் இடிப்பு பணியை மேற்கொண்டனர்.