கோவையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. எழுச்சியுரை

viduthalai
14 Min Read

நீங்கள் நண்பருடன் கோயிலுக்குப் போகிறீர்கள் – உன்னோடு வந்த நண்பனை உள்ளே விடுகிறான் – உன்னை வெளியே நிறுத்தினானே ஏன்? ஜாதி தானே!
அதைத் தட்டிக் கேட்க இயக்கம் கண்டவர்தான் தந்தை பெரியார்
கோவையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. எழுச்சியுரை

கோவை, ஏப். 28 – கோயிலுக்குள் ஒரு ஜாதியை உள்ளே அனுமதிப்பதும் மற்றவரை அனுமதிக்க மறுப்பதும் ஏன் என்று கேட்டார் – அவர்தான் தந்தை பெரியார் அவர் – கண்டது தான் சுயமரியாதை இயக்கம் என்றார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

இம்மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் பேசியதாவது :–

“அண்ணன் சுபவீ அவர்கள் இந்த மாநாட்டிலே நீ கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டபோது… எத்தனையோ பெருமைகள் நமக்கு கிடைக்கலாம், தேர்தலிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம், நம் உழைப்பை அங்கீகரித்து நாம் சார்ந்திருக்கும் இயக்கங்கள் நமக்கு பொறுப்புகள் அளிக்கலாம்.

ஆனால் இதையெல்லாம் விட பெருமையாக நான் நினைப்பது, தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பற்றி மேடையிலே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

நான் திராவிடர் கழகம்

எங்கள் வீட்டில் எல்லாரும் திமுக என்றால் என் மகள் கனிமொழி திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்று.

என் தந்தையாக தலைவராக அவர் எனக்கு தந்திருக்கும் பெருமையாக பொறுப்பாக கருதுவது இந்த வார்த்தைகளைதான். அந்த வார்த்தைகளின் நினைவோடுதான் இறுமாப்போடு இந்த மேடையில் நிற்கிறேன்.

சுயமரியாதை – வீரியமிக்க சொல்!

அழகான வீரியமிக்க வார்த்தை இருக்கிறது என்றால் அது சுயமரியாதை என்ற சொல்தான். வேறு எந்த அடிப்படைத் தேவைகளைத் தாண்டி ஒரு வாழ்க்கை வாழ்க்கையாக இருப்பதற்கு தேவை சுயமரியாதைதான்.

சுயமரியாதையோடுதான் உணவு தேவைப்படுகிறது. சுயமரியாதையோடுதான் நமக்கு இருக்க இடம் தேவைப் படுகிறது. சுயமரியாதையோடுதான் நமக்கு எதிர்காலம் தேவைப்படுகிறது. இப்படி சுயமரியாதையை உருவாக்கி கட்டமைத்து பாதுகாத்துத் தந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

இந்த உலகத்தில் பல நாடுகளில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்திருக்கிறது. இன்றுவரை இருப்பது ஆண் பெண் ஏற்றத் தாழ்வு. பெண் இரண்டாம் பட்சம்தான் என்ற இந்த நிலை இன்றுவரை இருக்கிறது.

நிறம், மதம், மொழி, பொருளாதாரத்தின் பெயரால் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தனை ஏற்றாத் தாழ்வுகளையும் மாற்றிவிடலாம், ஆண் பெண் என்பதைத் தவிர,.

பொருளாதாரத்தை ஈட்ட முடிந்தால் இரு தலைமுறை களுக்குப் பின் நாம் மேட்டுக்குடியாகிவிடலாம்., படித்தவர் படிக்காதவர் என்ற ஏற்றத் தாழ்வையும் நம்மால் மாற்றிவிட முடியும்.

ஆப்பிரிக்கர்களை நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தியபோதும், அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பர் வந்து அமர்ந்ததையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

மதம் – கடவுள்!

தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்கிறார், ‘ஏன் மதத்தை எதிர்க்கிறீர்கள்? ஏன் கடவுளை எதிர்க்கிறீர்கள்’ என்று கேட்கிறார்.

அதற்கு பெரியார், உன் அலுவலகத்தில் உனக்கு கீழ் வேலை செய்யும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரும் நீயும் ஒரு கோயிலுக்கு போனீர்கள் என்றால்… அவரை உள்ளே விடுவாங்களா, உன்னை உள்ளே விடுவாங்களா என்று கேட்கிறார்.

அப்போது, ‘அவரைத்தான் உள்ளே விடுவார்கள்; என்றார்.

அப்படியென்றால் உன்னால் ஜாதியைத் தாண்டி தடுப்பை தாண்டி போக முடியாத நிலையை இந்த மதம், கடவுள் உருவாக்கி வைத்திருக்கிறது. அதை மாற்றத்தான் அவை இரண்டையும் எதிர்க்கிறேன் என்கிறார் பெரியார்.

நீங்கள் படித்து வெளிநாட்டில் போய் வாழலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் ஜாதி உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது இறந்தால் கூட மேல்ஜாதிக்கான சடங்கு வேறு, நமக்கான சடங்கு என்பது வேறு,

பிறப்பதற்கு முன்பாகத் தொடங்கும் ஜாதிக் கட்டமைப்பு இறப்பைத் தாண்டியும் தூக்கி சுமக்கக் கூடியதாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்டோருக்கு போராடியவர் பெரியார்!

’எனக்கும் கடவுளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. . எனக்கு இந்த ஜாதி என்பது பிடிக்கவில்லை. யார் ஒடுக்கப்பட்டவர் என்று நினைத்தாலும் அதை எதிர்த்தவர்தான் பெரியார். ஜாதியின் பெயரால், நிறத்தின் பெயரால் யார் ஒடுக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டவருக்காக போராடுவேன் என்று சொன்னார் பெரியார். ஜாதி எப்படி வந்தது? மதத்தால் வந்தது. மதத்தின் காப்பாளர் கடவுள்.

ஒரே ஒரு உதாரணம்…

நான் தூத்துக்குடியில் இருந்து வருகிறேன். ஒரு ஊரில் ஒரு சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சரி செய்ய முடியும், ஊருக்கே பிரச்சினை வந்தது என்றால் அதன் வேர் எங்கே என்று தேட வேண்டும். அது ஒரு தொழிற்சாலையில் இருந்து வருகிறது என்றால்.. அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்றால் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும்.

காற்றை நிலத்தை நீரை நஞ்சாக்கும் அந்த ஆலையை மூட வேண்டும். என்று போராடி 13 பேரை பலிகொடுத்த தூத்துக்குடியில் இருந்து கேட்கிறேன். தொழிற்சாலையைதானே மூடுகிறோம்?

அதைத்தான் பெரியார் சொன்னார். எந்த இடத்தில் இருந்து பிரச்சினை உருவாகிறதோ அது மதமாக இருக்கட்டும், கடவுளாக இருக்கட்டும் அதை மூடு. ஒவ்வொருத்தராக கூப்பிட்டு வைத்தியம் பார்க்க முடியாது என்று சொன்னதுதான் சுயமரியாதை இயக்கம்.

அதனால்தான் எந்த மதமாக இருந்தாலும் தவறான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் அதை எதிர்த்தார்.

இன்று நிறைய பேர் சொல்கிறார்கள். திராவிட இயக்கம் இந்து மக்களுக்கு எதிரானது என்று. அதை நான் ஜஸ்டிஃபை பண்ணப் போவது இல்லை. அதற்கான அவசியமும் கிடையாது.

நான் இங்கே இரு விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள்தான் பெரும்பான்மை இந்து மக்களின் பாதுகாவலர்கள், இந்து மக்களின் அடுத்த தலைமுறையை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் எங்களை நம்புங்கள் என்று சொல்கிறார்கள்

உரிமைகளை பெற்றுத் தந்தது
திராவிட இயக்கம்!

1910 களில் வந்த இரு கணக்கெடுப்பை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சென்னை பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளாக 650 பேர் இருந்தார்கள். அதில் ‘நான்பிராமின்ஸ்’ என்று சொல்லக் கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களான இந்துக்கள் 12 பேர். மீதி 74 இருக்கும் 500க்கும் மேற்பட்டவர்கள் 3% இருக்கும் பிராமண ஜாதியை சேர்ந்தவர்கள்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பட்டதாரிகள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். அதில் எத்தனை சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தோம் என்றால்… யார் பெரும்பான்மை இந்து மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள் என்று தெரியும்.

யார் அவர்களின் தலைமுறையை மீட்டெடுத்து சிலிகான் வேலியில் இருந்து உலகம் முழுதும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் கோலோச்சுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

அதேபோல்; சப் கலெக்டர் 55% பதவிகளில் 3% இருந்த ஒரே இனத்தை சாந்தவர்கள்தான். துணை நீதிபதிகளாக 83% அவர்கள்தான் இருந்தார்கள். 72% முன்சீபுகள் அவர்கள்தான்.

இன்று எத்தனை ஆட்சியர்கள், அரசுப் பதவிகளிலே இருக்கிறார்கள். நாட்டிலேயே இத்தனை பேர் வந் திருக்கிறார்கள் என்றால் பிற்படுத்தப்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால் திராவிடஇயக்கம்தான்காரணம். இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களுடைய உரிமைகளை போராடி உங்களுக்கு பெற்றுத் தந்த இயக்கம் திராவிட இயக்கம்.

நம் முன்னால் பல கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டிருக்கிறது.

எல்லா மதங்களிலும் இருக்கும் மதவாதிகள் நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லித் தரும் ஒன்று… சமூகக் கட்டமைப்பை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, ‘நீ இந்த வாழ்வில் கஷ்டப்பட்டால், கேள்வி கேட்காமல் இருந்தால், உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நீ ஏற்றுக்கொண்டால்.. இதைத் தாண்டி உனக்கு பிரமாதமான சொர்க்கம் இருக்கிறது.

நீ எவ்வளவு அடிமையாக நடத்தப்பட்டாலும் , உன்னிடம் இருந்து உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அதெல்லாம் அடுத்த ஜென்மத்தில் ஈடு செய்யப்படும்’ என்றெல்லாம் சொல்லி நம்மை வார்த்தெடுத்தார்கள்.

திரும்பத் திரும்ப சொல்கிறோம்!
யுவெல் ஹராரி என்ற மிக முக்கியமான சிந்தனையாளர்,,.

‘மனிதர்களுக்கு கதைகள் தேவைப்படுகிறது. அதற்கு மதங்கள் தேவைப்படுகிறது. நீ வைத்திருக்கும் இரண்டு வாழைப் பழங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டால் அடுத்த ஜென்மத்தில் நன்றாக இருக்கலாம். உனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்குமென்று சொல்லி அந்த வாழைப் பழத்தை ஏமாற்றி நீ வாங்கிவிட முடியும்.

ஆனால் இதை ஒரு சிம்பன்ஸியிடம் போய் , இதேபோல் கேட்டால் அது என்ன பண்ணும்? சிம்பன்ஸியிடம் இருந்து அடிதான் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

மிருகங்களிடம் கூட சொல்லி செல்லுபடியாகாத ஒரு கதையை மனிதர்களிடம் திரும்பத் திரும்ப நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இதே கதைகளை பெண்களிடம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம், நீ கஷ்டப்படு… இதுதான் உனக்கு விதிக்கப் பட்டது என்று பாசிசம் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொன்றையும் எதிர்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரைப் பார்த்தாலே மேலே நடுக்கம் ஏற்படுகிறது.

நீங்கள் எதையெல்லாம் தேசியம் என்று கட்டமைக்கிறீர் களோ, எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் தேச விரோதிகள், நக்சல்கள் என்று கட்டமைப்பீர்களோ… நான் இந்த நாட்டின்பால் உள்ள அக்கறையில் கேட்கிறேன் என்று முதலமைச்சர் கேட்கிறார்.

ஆட்டுக்கு தாடி எதற்கு?

ஆளுநர் தேவையில்லை என்று பலகாலமாக திராவிட இயக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு என்று நாம் கேட்டோம். இப்போது உச்சநீதிமன்றத்தையே கேட்க வைத்த இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் மாறியிருக்கிறது.

அதேபோல நமது மொழியை நம்மிடமிருந்து பறித்துவிட வேண்டும். மொழியின் வழியாகத்தான் நமக்கு செய்திகள் வருகிறது. ஒவ்வொரு இனமும் தன்னுடைய சரித்திரத்தை புத்தகங்களாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்ப்பதில்லை. கதைகளாக வீடுகளிலே பேசக் கூடிய உரையாடல்களாக மாற வேண்டும்.

யூதர்களை எடுத்துக் கொள்ளுங்கள்… ஜெர்மனியில் அவர்கள் நடத்தப்பட்ட விதம், அவர்கள் கொல்லப்பட்ட வரலாற்றை தங்களுடைய குழந்தைகளுக்கு இன்றுவரை தினமும் கதைகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இன்று உலகத்தையே ஆளக் கூடிய இடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்:. நாம் அதுபோல் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று அய்யா சுபவீ அவர்கள் திராவிடப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடப் பள்ளியில் சேருங்கள்!

நான் மகளிரணி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அந்த பள்ளியிலே தயவு செய்து நீங்களும் பதிவு செய்துகொள்ளுங்கள். வரலாற்றை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சிலிகான் வேலியிலும் கனடாவிலும் அமர்ந்துகொண்டு, பள்ளிக் கூடங்களில் எதற்காக ஜாதி சர்டிபிகேட் என கேட்கிறார்கள். அதனால்தான் ஜாதி வளர்கிறது என்று சொல்லக் கூடிய ஒருதலைமுறையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் அங்கே வந்து உட்கார வாங்கிய அடியெல்லாம் உனக்குத் தெரியாது. தமிழ்நாட்டுக்கு திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கும் இளைஞர்களுக்கு அந்த செய்திகளை சொல்லாமல் விட்டது நாம் செய்த தவறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் மகாபாரதம், ராமாயணம் கதைகளைச் சொல்கிறோம். கதைகளை சொல்லுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் வரலாற்றைச் சொல்லுங்கள். எத்தனை அடிகள் வாங்கினோம். உரிமை களை இழந்தோம், எப்படி போராடிப் பெற்றோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளருங்கள்.

இல்லையென்றால் ஆஸ்திரேலியாவிலும் வெளிநாடு களிலும் போய் உட்கார்ந்துகொண்டு அவர்கள் ஜாதி மாநாடுகளை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. என்னுடைய ஜாதியில் பெண்ணைத் தேட வேண்டும் என்று அங்கிருந்து இங்கே பயணம் வந்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உரிமைகளை தக்க வைப்போம்!

அதனால் நாம் வந்த வழியை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும். அப்படி சொல்லித் தந்தால்தான் இன்றுநாம் பெற்றிருக்கும் உரிமைகளை எதிர்காலத்தில் நாம் தக்க வைக்க முடியும்.

இந்தியாவின் வொர்க் ஃபோர்சில் 42% பெண்கள் இருக்கிறோம் என்று பெருமையோடு பதிவுசெய்யும் அதே நேரம்., இந்த் நிலையை அடைய தந்தை பெரியார் போல பேரறிஞர் அண்ணா போல கலைஞர் போல, நமது தளபதி போல தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் போராட்டம் முடிந்துவிட்டது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. சுயமரியாதை இயக்கம் பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறது, சுயமரியாதை பற்றி எனக்கு விழிப்புணர்வு இருக்கிறது. அக்கறை இருக்கிறது என்று சொல்லக்கூடிய எந்த ஒரு ஆணும் பெண்ணும்… பெண் விடுதலையை மறுக்கக் கூடியவர்களாக பெண்ணை மதிக்காதவர்களாக பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமான தளம் வேண்டும் என்று நினைக்காதவர்களாக, இருந்தால் அவர்கள் சுய மரியாதைக் காரர்களாக இருக்க முடியாது. எப்படி இருக்க முடியும்?

பாதி சுயமரியாதையை ஏற்க முடியும், மீதி ஏற்க முடியாது என்றால் நீ சுயமரியாதைக்காரனாக இருக்க முடியாது.

போலித் தனம் கூடாது!

ஒரு பெண்ணை இழிவுபடுத்தக் கூடியவன் ஒரு பெண்ணை தனிப்பட்ட முறையிலே கிண்டலாக கேலி பேசி மேடையிலே இழிவுபடுத்தக் கூடிய யாரும் சுயமரியதைக் காரர்களாக பெரியார் வழியிலே வந்தவர்களாக இருக்க முடியாது. பெண்ணுக்கு ஏன் இந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக் கூடியவர்கள் யாரும் சுய மரியாதைக் காரர்களாக இருக்க முடியாது.

அதேநேரத்திலே ஒரு பெண் எனக்கான உரிமைகள் வேண்டும் என்று கேட்கக் கூடிய பெண், சாதியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால், அவளுக்கும் அதற்கான எந்த தகுதியும் அருகதையும் கிடையாது.

ஏனென்றால் உரிமை என்று சொல்லும்போது சுயமரி யாதை என்று சொல்லும்போது எல்லாருக்குமான ஒன்றாகத்தான் அது இருக்க முடியும். பாதிப் பாதியாக பிரித்து இதெல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொள்ளக் கூடிய சுயமரியாதை முழுமையான சுயமரியாதையாக உண்மையான சுயமரியாதையாக இருக்க முடியாது. அது போலித் தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

நாம் போராடிப் போராடிப் பெற்றிருக்கக் கூடிய இந்த நிலை, தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பெயருக்குப் பின்னாடி ஜாதிப் பெயர் இல்லாததுதான் தமிழ்நாட்டின் அடையாளம்.

வேறு எந்த மாநிலத்திலும் இதைப் பார்க்க முடியாது. எவ்வளவோ படித்து முன்னேறிய மாநிலம் என்று சொல்லக் கூடிய மாநிலங்கள் கூட ஜாதிப் பெயரை இன்னமும் விட வில்லை. அந்த பெருமை அவர்களை இன்னும் விடவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களை பெயரைப் பார்த்தாலேதெரியும். பெயருக்குப் பின்னால் வாலே இருக்காது. ஆனால் அந்த வால் சில தவறான அரசியலால் அதற்கு நாம் கொடுக்கக் கூடிய சின்னச்சின்ன வாய்ப்புகளால், மறுபடியும் இங்கே தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.

அதை வெட்ட வேண்டும் என்று நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறும்!

அதேபோல மதக் காழ்ப்புகள், மத துவேஷங்கள் என்ற போர்வையில் ஒருவர் தாக்கப்படுகிறார் சிலர் உயிரிழக் கிறார்கள் என்றால் அதைச் சுற்றி ஒரு கதையை பின்னி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடியவர்களிடம்தான் இன்று நாட்டின் ஆட்சி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு மசோதாவிலும் மக்களை பிளவு படுத்தக் கூடிய மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய ஆட்சிதான் பாஜக ஆட்சி.’

அவர்கள் இந்த மண்ணிலே பொறுப்பிலே இருக்கும் வாய்ப்பு தொடரும் என்றால் நாம் கட்டமைத்திருக்கும் இந்த நாடு ஒரு மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறும்.

அவர்கள் ஊடுருவாமல் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை கடப்பாடு நமக்கு இருக்கிறது. அதைத் தாண்டி இந்த நாட்டையும் பாதுக்காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நமக்கு எதிர்காலத்தில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை புரிந்துகொள்ளும் நிலையில் கூட பல மனிதர்கள் இல்லை.

மனித இனத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியை நாம் திரும்பிப் பார்த்தோம் என்றால்… விவசாயிகளாக இருந்தோம், அதன் பின் தொழில் புரட்சி, அதன் பின் டெக்னாலஜி புரட்சி… இன்று ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் புரட்சி

உனக்கு தெரிந்த எல்லாவற்றையும் ஆர்ட்டிபிசீயல் இண்டெலிஜன்ஸ் செய்யும் உன் வேலையைப் பாரு என்ற நிலையில், அந்த வேலை என்ன என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் மனித இனம் நின்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தியைப் படி ,அதைப் படி இதைப் படி என்று திணித்தால் இது கொஞ்சமாவது அறிவியலுக்கு ஒத்துவரும்படி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். தொழில் நுட்பத்தை சொல்லிக் கொடுக்காமல் இந்தியை படி என்று சொல்லியிருந்தால் நம் தமிழ் பிள்ளைகள் இன்று உலகத்தின் பல நாடுகளில் வேலைகளில் இருக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

இன்று உலகம் மிகப்பெரிய மாற்றத்தின் வாசலிலே நின்றுகொண்டிருக்கிறது. நம் பிள்ளைகள் எந்த பாடத்திட்டத்திலே சேர்த்து என்ன பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற முக்கியமான கேள்விகள் நம் முன்னே நின்றுகொண்டிருக்கும் நிலையில்… 100 வருடம் முன்பு நாம் போட்ட சண்டையை இன்றும் போடு போடு என்று சொல்கிறார்களே அவர்களை இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டப்பட வேண்டும்.

அதுதான் நம்முடைய எதிர்காலத்தின் வளர்ச்சி. அதை மடைமாற்றுவதற்கு மொழியை கற்றுக் கொள், அதை மடை மாற்றுவதற்கு மதத்தைக் கொண்டு வந்து திணித்து பெண்கள் இளைஞர்கள் முன்னேற்றத்தில் தடைக்கற்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து கேள்வி கேட்டால் பெண்கள் அடங்கி விடுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. எந்த கேள்விக்கும் நம்மால் பதில் சொல்ல முடியும், அதற்காக பெரியாரை படிக்க வேண்டும். ஏன் பெண் அடிமையானாள் என்ற புத்தகத்தை படித்தால் யார் தடுத்தாலும் நிற்க மாட்டோம். உடைத் துக் கொண்டு போய்க் கொண்டே இருப்போம்.

இதுபோன்ற சுயமரியாதை மாநாடு ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட வேண்டும். நம்முடைய வலியை நம்முடைய போராட்ட உரிமை சரித்திரத்தை ஒவ்வொரு நாளும் எடுத்துச் சொல்வோம். கதைகளாக உரையாடல்களாக எடுத்துச் சொல்வோம். இனி நம் உரிமையை யாரும் பறித்துவிட முடியாத அரணாக திராவிட இயக்கம் திகழும்.

இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, திரு.நவாஸ்கனி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, தி.மு.கழக மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், தி.மு. கழக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, தி.மு. கழக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர் உமா மகேஷ்வரி, கழக மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மாலதி நாகராஜன், அப்பாவு புவனேஸ்வரி மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *