அக்னி வீரர் தேர்விலும் லஞ்சமா?

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.26 இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பெயரில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் கடற்படை பணிக்கு அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பலான அய்என்எஸ் சிலிகா அக்னி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மய்யமாக இருக்கிறது. அக்னி வீரர்கள் தேர்வு பணியை வழக்கம் போல கண்காணித்த போது, தேர்வுக்கு வந்தவர் பலரிடம் பணம் கேட்கும் முயற்சி நடப்பதாக அய்ஏஎஸ் சிலிகாவுக்கு சந்தேகம் இருந்தது.

அதன் பேரில் கடற்படை கண்காணிப்பு குழு விரைவாக செயல்பட்டது; லஞ்சம் வாங்கிய இரண்டு கடற்படை வீரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் அந்தமானில் அய்என்எஸ் கேசரியில் பணியாற்றும் சத்தியம் சாகர். மற்றொருவர் விநாயக் குமார். ஒருவர் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி பூசன்.

இவர்கள் அக்னி வீரர்கள் தேர்வுக்கு வந்தவர்களிடம் உடல் தகுதி தேர்வு, காவல்துறை சரிபார்ப்பு ஆகியவற்றில் உதவுவதுடன், வேலை கிடைக்க உதவி செய்வதாக வாக்குறுதி அளித்து, பெரும் பணம் பெற்றனர். பல்வேறு வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களை வைத்திருந்தனர். தேர்வுக்கு வந்தவர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்க, அவற்றை பயன்படுத்தினர். தேர்வுக்கு வந்த பலரை தொடர்பு கொண்டு, அவர்கள் தேர்வு பெற உதவுவதாக வாக்குறுதி அளித்து, பணம் பெற்றனர். இவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். வங்கி ஆவணங்களும் சிக்கின; மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 12 வங்கி கணக்குகளை முடக்கினர். நாலு அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். இந்த ஊழலில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுதான் பிஜேபி ஆட்சியின் நேர்மை போக்கு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *