சென்னை, ஏப்.26 மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
57 மாணவர்கள் தேர்ச்சி!
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழ்நாட்டில் முதலிடமும் இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இந்நிலையில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் இன்று (26.4.2025) நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
“கடந்த காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் பலன் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறவே ‘நான் முதல்வன்’ திட்டம் இருக்கிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் மாணவர்கள் விட்டுவிடவே கூடாது
கல்விதான் நமக்கு ஆயுதம்!
கல்விதான் நமக்கு ஆயுதம்; மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக ‘நான் முதல்வன்‘ திட்டம் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மீதும், ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவுமுகம் இருக்கிறது;
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தால் இன்னும் மதிப்பு கூடும். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள். யு.பி.எஸ்.சி. யில் தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்ச்சி குறைந்திருந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்த 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ‘நான் முதல்வன்‘ திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன், இந்திய அளவில் 23 ஆவது இடம் பெற்று சாதனை படைத்தார். வெளி மாநிலங்களுக்குச் சென்றாலும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற உங்கள் பணி சிறக்கவேண்டும். எங்கு பணிபுரிந்தாலும் சமத்துவம், சமூகநீதி, நேர்மையுடன் மக்கள் உயர்வுக்கு பாடுபட வேண்டும்.
நாளை உங்கள் பெயரை ‘ரோல் மாடலாகச்’ சொல்லும்!
100 பேராவது யுபிஎஸ்சி தேர்வில் வரும் ஆண்டில் வெற்றிபெற வேண்டும் என்பது அரசின் விருப்பம். எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறவே ‘நான் முதல்வன்’ திட்டம்.
நாளை உங்கள் பெயரை ‘ரோல் மாடலாகச்’ சொல்லும் அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவும் வகையில் இருக்கவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.