நல்லமுத்துக் கதை மிகுந்த நகைச்சுவை நிரம்பிய சீர்திருத்தக் கதை. வீட்டுத் தலைவன் வெள்ளையப்பனும் மனைவி மண்ணாங்கட்டியும் மகன் திருமணத்துக்குச் சொறி பிடித்த கொக்குப் புரோகிதனிடம் சாதகம் கேட் கிறார்கள். விரைவில் மகனுக்குத் திருமணம் செய்ய விரும்பிய தந்தையும் தாயும் ‘மணம் எப்போது முடியும்? மணமகள் எங்கே இருக்கிறாள்? அயலா, உறவா? எல்லாம் பார்த்துப் பொறுமையாய்ச் சொல்ல வேண்டும்’ எனக் கேட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் காலையில் வராததற்குக் காரணம் கேட்கிறார்கள். வீட்டுச் சிக்கல் உள்ளத்தை வருத்த, கொக்குப் புரோகிதன் தன் கதை யினைக் கக்கிவிடுகின்றான். தன் பெரிய பெண்ணைத் தெரியாமல் திருட்டுப்பயலுக்குத் திருமணம் செய்ததாகப் புரோகிதன் சொல்வது பெரிய வேடிக்கை. வட்டிக்கடை யில் நகைப்பெட்டியைத் தட்டிக்கொண்டு போய்,சிறைக் குப்போய், பின் செத்து மடிந்தானாம். தன் மகளோ கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு மொட்டைத் தலையுடன் மூதேவிபோலப் பிறந்த வீட்டிற்கு வர நேர்ந்ததாம். சின்னப் பெண்ணைக் கப்பல் கப்பலாய்க் கருவாடு ஏற்றும் வாசனுக்கு மணம் செய்வித்தான். மணம் நடந்த மறுநாள் உண்மை தெரிந்தது. கருவாட்டு வாசன் வாணிகன் அல்லன், கூலியாள் என்று. ஒரு நாள் இளைய மருமகன் வாசன் பெருங்குடி வெறியால் நாயைக் கடித்தான், நஞ்சேறி இறந்து போனான் என்று தன் வரலாறு கூறும் கொக்குப் புரோகிதன், வெள்ளையப்பன் வீட்டில் சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன் எனப் பேசுவது, குறி கேட்பார் மடமையை வெளிப்படக் காட்டும் ஒளிமிக்க நகைச்சுவை. தன் பெற்ற மகளுக்கே நல்ல மாப்பிள்ளை தேட முடியாது சீரழிந்த புரோகிதன், ஊரார் பெண்ணுக்குக் குறி கூற வருவது வேடிக்கைச் செய்தி.
மாப்பிள்ளை பார்க்கவந்த இரிசனும் மாப்பிள்ளை நல்லமுத்துவும் நிகழ்த்தும் உரையாடலில் நகைச்சுவை ததும்பி நிற்கின்றது. என்ன படிக்கிறாய் என்று கேட்ட இரிசனுக்குக் காலே அரைக்கால் கம்பராமாயணம் என நல்லமுத்து பதிலிறுப்பதும். இப் புதிய ராமாயணத்தை இரிசன் புரிந்துகொள்ளமுடியாது தவித்தபோது சிதம்பர நாதர் திருவருளாலே அரையே அரைக்கால் அழிந்து போனதாகவும், எஞ்சிய காலேஅரைக்காலை மொழி மாற்று வேலைப்பாட்டுடன் அச்சிடப்பட்டதாகவும் கூறு வதில் நகைச்சுவை காண்கிறோம்.
இரிசன், உன் தந்தை பெண்ணைப் பார்த்தார். நீயும் ஒருமுறை பார்க்கவேண்டும் என நல்லமுத்துவை வேண்டுகிறார். ‘அப்பா பார்த்தால்,அதுவே போதும். என்கிறான் நல்லமுத்து. ‘மணந்துகொள்ளும் மாப்பிள்ளை இணங்க வேண்டுமே என்ற இரிசனுக்கு. இணங்கினால் அதுவே போதுமென்கிறான். அப்பா கட்டிக் கொள்பவரின் கண்ணுக்குப் பிடிக்க வேண்டாமா என்ற இரிசனுக்கு, தந்தைக்குப் பிடித்தால் போதும் என்கிறான் நல்லமுத்து. இறுதியாக இரிசன். என் மகள் ஒருமுறை உன்னைப்பார்க்க வேண்டுமென்கிறாள்; அதற்கு நல்லமுத்து அப்பாவைப் பார்த்தால். அதுவே போதும் என்கிறான். மூடத் திருமணத்தைச் சாடும் நகைச்சுவைப் பகுதி இது.
வெள்ளையப்பன் தன் மனைவி மண்ணாங்கட்டியைத் தவிர்த்துவிட்டு, அம்மாக்கண்ணுவின் மேல் ஆவலாய் வருகிறான். வந்தவன்,
“மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள் தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்’
என்று தன் சாமர்த்தியம் பேசுகிறான். இது கேட்டு மகிழ்ந்த அம்மாக்கண்ணு. இன்று நீர் வந்திராவிடில் என்னுயிர் போய்விடும். ஏக்கம் இருக்கையில் தூக்கம் வருமா என்று, எப்பொழுதும் அவன் நினைவாக இருந்த தன்னுடைய தீயொழுக்கத்தின் திண்மை பேசுகிறாள்.
கழுதை கத்தும் கனைத்தீர் என்று எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன் உம்மை எப்போதும் உளத்தில் வைத்ததால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் வீடும் நீங்கள் மாடும் நீங்கள் திகைப்ப டைந்து தெருவிற் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள் கழுதை நீங்கள் குதிரை நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்”
(தொகுதி III : நல்லமுத்துக் கதை)
“நோக்குவவெல்லாம் அவையே போறல்” என்ற உயர்ந்த காதல் தத்துவத்தை, இழுக்கொழுக்கம் பூண்ட இழிதகை யாரின் நிலைக்குத்தகத் தாழ்த்திப் பாடியிருப்பது, தாழ்ந்த காதலின் தகுதி காட்டுவதோடு, பாவேந்தரின் ஆழ்ந்த நகைச்சுவைத் திறமும் காட்டுகிறது.
– பேராசிரியர் அப்துல் கறீம்
(பாரதிதாசன் பாட்டுத் திறம் நூலில்)