புதுடில்லி, ஏப். 25- கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6,7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் 24.4.2025 அன்று தெரிவித்தது.
ரயில் எரிப்பு சம்பவம்
குஜராத் மாநிலம் கோத்ரா அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகளாக 31 பேரை அறிவித்த சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் 31 பேர் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 31 பேரின் தண்டனையை உறுதிசெய்தது. அதே நேரம், குற்றவாளிகள் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது.
11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதுபோல, குற்றவாளிகள் தரப்பிலும் அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வில் 24.4.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவரங்களை குற்றவாளி வாரியாக குறிப்பிட்டும், தற்போது அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ள வாதத்துக் கான ஆதார விவரங்களையும் குறிப்பிட்டு வரும் மே 3-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகள் ஒருவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தெரி வித்தனர்.
மே 6, 7ஆம் தேதிகள்
அதுபோல, மாநில அரசு காங் தரப்பிலும் இதுபோன்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், ‘இந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, முதல் கட்டமாக வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் நாள் முழுவதும் இந்த வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாள்களில் வேறு எந்த வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்படாது’ என்று நீதிபதி மகேஸ்வரி தனது உத்தரவில் தெரிவித்தார்.