‘திராவிட மாடல்’ அரசின் கல்விப் புரட்சி!

Viduthalai
3 Min Read

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘‘நான் முதல்வன்’’ உள்ளிட்ட திட்டங்கள் உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்: அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் வாய்ப்புகள் – நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் – புதுமைப் பெண் திட்டம் மாணவிகளுக்கு உதவி செய்கின்றன
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையொட்டி புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை என்பது 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது சாதாரணமானதல்ல! இந்த தகவலை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

கல்வியாண்டு உயர்கல்வியில் சேர்ந்தவர்கள்
2021-2022 45 சதவீதம்
2022-2023 69 சதவீதம்
2023-2024 74 சதவீதம்
இதன் பின்னணியில் இரண்டு முக்கிய திட்டங்களை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஒன்று ‘புதுமைப் பெண்’ திட்டம், மற்றொன்று ‘நான் முதல்வன்’ திட்டம். புதுமைப் பெண் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். அவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை இந்த சலுகை அளிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

இதே மாதிரியில் தான் 2024ஆம் ஆண்டு ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த இடத்தில் மற்றொரு முக்கியமான திட்டத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் முதல்வன் திட்டத்தை 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

நான் முதலவன் திட்டம் மூலம் நான்கு விதமான பிரிவுகளில் கவனம் செலுத்தப்படுகிறது. உயர்கல்வியில் சேர்வது, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்துறை திறன் பயிற்சி அளிப்பது, தொழில்முனைவோராக மாற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் அரசுப் பள்ளியில் படித்து விட்டு, உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் – எந்தப் படிப்பில் சேருவது எனத் தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உந்துதலாக அமைகின்றன.

இதுதவிர அய்.அய்.டி., அய்.அய்.எம்., என்.அய்.டி போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் செலவை ஏற்கவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இவை அனைத்தையும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரித் திட்டங்களாக, அரசே முன்னிறுத்தி வருகின்றது.
‘திராவிட மாடல்’ அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று யு.பி.எஸ்.இ. தேர்வில் 134 பேர் நேர்காணல் தேர்வுக்குச் சென்றனர். இதில் 50 பேர் தேர்வில் வென்றனர். இது கடந்த ஆண்டுகளை விடக் கூடுதல் எண்ணிக்கையாகும்.
இவ்வாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 50 பேர் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
இந்தியாவில் முதல் 100 தகுதிகளில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
‘நான் மட்டும் முதல்வன் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக விரும்பி தொடங்கி வைக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யு.பி.எஸ்.சி., தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘திராவிட மாடல்’ அரசு என்ன செய்தது எ்னறு குறும்புத் தனமாகவோ விஷமத்தனமாகவோ கேட்பவர்களுக்கு இந்த வெற்றிதான் – செயல்பாடுதான் சரியான சவுக்கடியாக இருக்க முடியும்!
2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்து மேலும் ஒளியூட்டும் என்பதில் அய்யமில்லை.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *