சென்னை, ஏப்.24 புத்தகங்கள்தான் புதிய உலகிற்கான திறவுகோல்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.
மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம். “புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.