சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் 500 புதிய முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
500 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்
சட்டப் பேரவையில் நேற்று (21.4.2025) அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மருத்துவ படிப்பு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 13 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்.
சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை,மதுரை,கோவை, சேலம், கடலூர் உள் பட 25 அரசு மருத்துவக்கல் லூரிகளில் உள்ள மருத்துவ மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாரடைப்புக்காக உயிர்காக்கும் உயர்சிகிச்சை அளிக்க இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் ரூ.15 கோடி கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, சிவகங்கை, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பட்டுக்கோட்டை, மேட்டூர், மணப்பாறை, பொள்ளாச்சி ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் கருவிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 100 அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல வாழ்வுமையங்கள் ரூ.7கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.