தமிழ்நாடு ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் தென்னிந்திய ரயில்வேயின் வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை

viduthalai
3 Min Read

சென்னை, ஏப். 22- தமிழநாடு ரயில்வே திட்டங்களை விரைந்து முடித்திட வேண்டும் என்று தென்னிந்திய ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

தென்னிந்திய ரயில்வேயின்
வருடாந்திரக் கூட்டம்:

ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய ரயில்வே, தான் சேவை அளிக்கும் பகுதிகளின் ரயில்வே தொடர்பான கோரிக்கைகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வருடாந்திர கூட்டத்தை மேற்கொள்ளும். அந்த வகையில் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவடைந்த பின்னர் தென்னிந்திய பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு, பல வருடங்களாக நிலுவையில் உள்ள ரயில்வே தொடர்பான திட்டங்களையும் மற்றும் புதிய கோரிக்கைகளை வழங்கி அவற்றை விரைந்து நிறைவேற்றிடுமாறு வலியுறுத்தினார். அதன் விபரம் வருமாறு:

நடை மேம்பாலம்

ஆலந்தூர் மற்றும் மடுவின்கரை பகுதிகளை இணைக்கும் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பச்சையம்மன் ரயில்வே கிராசிங் மூடப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்கு தென்னிந்திய ரயில்வே கடந்த 13.09.2023 அன்று ஒப்புதல் அளித்திருந்தது அதனை விரைந்து முடிக்க வேண்டும்,

கடந்த 2012ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த ஆவடி – திருப்பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அதை உடனடியாகத் தொடங்க வேண்டும்,

திரிசூலம் மேம்பாலம்

மீனம்பாக்கம்(திரிசூலம்) ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்,

ஆலந்தூர் ஏ.ஜி.எஸ். நிதி பள்ளி அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நடைமேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும், தாம்பரம் ரயில் முனையத்தின் 7வது மற்றும் 8வது நடைமேடையில் பயணிகள் வசதிக்காக கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,

சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லும் மின்சாரம் மற்றும் விரைவு ரயில்கள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் புதிதாக நான்காவது நடைமேடையினை அமைத்திக்க வேண்டும், அம்பத்தூர் ரயில் நிலையத்தின் 1வது மற்றும் 2வது நடைமேடைகளை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப்பாதையை கடப்பதை தடுக்கும் பொருட்டு, ஏற்கனவே உள்ள நடை மேம்பலத்தினை 4வது நடைமேடை வரை நீட்டிக்க வேண்டும்,

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரை செல்லும் விரைவு மின்சார ரயிலானது (வண்டி எண்.66021) அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்,

அம்பத்தூர் ரயில் நிலையத்தை, ரயில்வே முனையமாக மாற்றும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், கருடாதிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும்,

மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை

வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை இணைக்கும் வகையிலும், தென் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதுமான இராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி வரை செல்லும் புவனேஸ்வர்-புதுச்சேரி, புவனேஸ்வர்-இராமேஸ்வரம், பிலாஸ்பூர்-புதுச்சேரி, பிலாஸ்பூர்-ராமேஸ்வரம், புதுடெல்லி-புதுச்சேரி, அயோத்தியா-இராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்களை தாம்பரம் ரயில் முனையத்தின் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும்

விஜயவாடாவிலிருந்தும் மற்றும் மும்பையிலிருந்தும் இரண்டு தனி ரயில் சரக்குப் பாதைகள் தமிழகத்தின் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு தொடங்கப்பட வேண்டும்,

தஞ்சாவூர் – ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி – மதுக்கூர் – புதுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில்வே பாதைகள் தொடங்கப்பட வேண்டும், மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *