தமிழ்நாட்டில் பற்ற வைத்த ஹிந்தி எதிர்ப்புத் தீ மராட்டியத்திலும் வெடித்துக் கிளம்பியுள்ளது!

viduthalai
2 Min Read

மும்பை, ஏப்.21  மராட்டிய மாநில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்கும் அரசின் முடிவுக்கு மாநில மொழி வளர்ச்சிக்குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குழுவின் தலைவர் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், இந்தத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறும்படி முதலமைச்சர் தேவேந்திர பட்னவீசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு  மாநிலம் அனைத்திலும் முதலாம் வகுப்பு முதல் பள்ளிஇறுதி வரை ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவு வந்தது. முதலில் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலமும் மராட்டி மட்டுமே மகாராட்டிரா மாநிலத்தில் இருந்தது.

மக்கள் கருத்தை அறியவில்லை

இந்த நிலையில், ஹிந்தித் திணிப்பு முடிவுக்கு முன் எந்தவிதமான ஆலோசனையும், பொதுமக்கள் கருத்து கணிப்பும் இல்லாததைக் குறிப்பிட்டு,  மாநில மொழி வளர்ச்சி ஆணையம் அரசின் இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது

இந்த முடிவு கல்வியாளர்கள், மொழி பெயர்ப்பா ளர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பலர் இது குறித்து பொது விவாதமோ, நிபுணர் ஆலோ சனையோ இல்லாமல் ஒருதலைப்பட்சமாக நடை முறைப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டுகி றார்கள்.

மராட்டிய இலக்கியவாதி தன்வந்தி ஹர்திகார் கூறுகையில், இந்த நடவடிக்கையால் மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்; மக்களின் நம்பிக்கையைப் பெறாமல், இதுபோன்ற மொழித் திணிப்பை அமல்படுத்தியது மராட்டிய மக்களிடையே கடுமையான எதிர்ப்பைத் தூண்டி யுள்ளது,” என்றார். மேலும் இந்த முடிவு மராட்டிய மொழியைச் சிதைக்கும் முயற்சி’ என கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சிவசேனா தலைவர் மற்றும் மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “எல்லா மொழிகளையும் மதிக்கும் ஒரு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்த மாதிரியான திணிப்புமூலம் நாடு ஒற்றுமையாக இருப்பதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்  இது மாநில உணர்வுகளை சீண்டும் வேலை” எனத் தெரிவித்தார்.

மாநில அரசின் ஆணையமே எதிர்ப்பு!

மாநில மொழி வளர்ச்சிக் குழு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதால், அரசின் இந்த முடிவு கேள்விக்குறியாகி உள்ளது. மாநில கல்வி வளர்ச்சிக்குழு பள்ளிகளின் பாட நூல்களின் பாடங்களை முடிவு செய்வதில் முதுகெலும்பாக உள்ளது. அந்த அமைப்பே அனைத்து வகுப்புகளிலும் ஹிந்தி கட்டாயம் என்ற இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறிய நிலையில், மாநில அரசு தனது ஹிந்தித் திணிப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அரசின் ஆணையமே எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமிக்கப்படுவாரா?

ஆனால், முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் புதிய கல்விகொள்கை மாணவர்களின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல கல்வியாளர்கள் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகவே எளிமையாக்க வழிவகைசெய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆகவே ஹிந்தித் திணிப்பை எதிர்த்த மாநில வளர்ச்சிக்கழக தலைவர் விரைவில் மாற்றப்பட்டு ஆர்.எஸ்,எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அப்பதவியில் அமர்த்தப்படலாம் என்று பிரிபிரஸ் ஜெர்னல் என்ற நாளிதழ் ஆசிரியர் பங்கஜ் வாயிர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *