இந்தியாவில் ஜாதிகள் இல்லையா? ‘‘புலே’’ படத்தின் தடைக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு

Viduthalai
2 Min Read

மும்பை, ஏப்.19 அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகிய வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராட்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

படம் வெளியாவதில் தடை
ஆனால் திரையரங்குகளில் வெளியாகும் முன் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) கேட்டுக் கொண்டுள்ளது.
‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ மற்றும் ‘மனுவின் ஜாதி அமைப்பு’ போன்ற வார்த்தைகள் உள்பட குறிப்பிட்ட ஜாதி குறிப்புகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் ஒன்றிய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இது திரைப்படத் தயாரிப் பாளர்கள் மற்றும் சமூக செயல் பாட்டாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என் வாழ்க்கையில் நான் நடித்த முதல் நாடகம் ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே பற்றியது. இந்தியாவில் ஜாதிகளே இல்லை என்றால் அவர்கள் எதற்கு போராடினார்கள்?.
இந்த படத்தால் பார்ப்பனர்கள் வெட்கப்படுகிறார்கள். ஒன்றிய தணிக்கைக் குழுவை தாண்டி மற்றவர்கள் எப்படி படத்தினை பார்க்கிறார்கள்? இந்த ஒட்டு மொத்த அமைப்புமே மோசமாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமல்ல ஏற்ெகனவே சந்தோஷ், தடாக் 2, பஞ்சாப் 95, டீஸ் ஆகிய படங்களும் இந்தப் பிரச்சினைகளால் இந்தியாவில் வெளியாகாமல் இருக்கின்றன.

ஜாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?. இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்ன செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள்.
தடாக் 2 படத்தின் திரையிடலி ன்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி ஜாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.
தற்போது, பார்ப்பனர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். ஜாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பார்ப்பனர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?. மோடியின் கூற்றுப்படி இந்தியாவில் ஜாதியப் பாகுபாடு இல்லை என்பதால் உங்கள் பார்ப்பன சமூகமும் இங்கே இல்லை. அல்லது எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *