பொதுவாழ்க்கையில் நான் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்
தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி – உங்களுடைய அன்பு, ஆதரவு!
இனமும், கொள்கையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் நம்மை இணைத்திருக்கின்றன!
சென்னை, ஜூலை 4 நான் பொதுவாழ்க்கையில் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணமே, நண்பர்களுடைய ஒத்துழைப்பு, தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி; உங்களுடைய அன்பு, ஆதரவு; ஆட்சியாளர் களுடைய மிகப்பெரிய தெம்பு; இனமும், கொள்கையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் நம்மை இணைத்திருக் கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 27.6.2023 மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.
அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு
என் தலைதாழ்ந்த நன்றி!
இன்னொரு சிறப்பு என்னவென்று சொன்னால், அய்யாவிடம் இருந்ததினால்தான், இந்த மிகப்பெரிய வாய்ப்புகள் எனக்கு. இல்லையென்றால், ஒரு சராசரி மனிதராகத்தானே நான் இருந்திருக்க முடியும். என்னு டைய ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு நான் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் முதலாக மேடையில் என்னை ஏற்றியபொழுது, எனக்கு எழுதிக் கொடுத்தார் அவர். நான் மனப்பாடம் செய்துதான் அந்தக் கூட்டத்தில் பேசினேன். அண்ணா அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், என்னை தயாரிக்கும் பொழுது, ஒரு மேசையையும் தயாரித்திருக்கிறார்கள். அப்பொழுது நான் அணிந்தது அரைக்கால் சட்டைதான்; பிறகுதான் முழுக்கால் சட்டையாக மாற்றினார் ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.
இவ்வளவு பெரிய அளவிற்கு என்னை தயாராக்கியது தந்தை பெரியார் என்ற
அந்த மாபெரும் தத்துவம்தான்!
வெளியூர்களுக்கு என்னை பேச அழைப் பார்கள். அரை டிக்கெட்தான் எனக்கு ரயிலில். என்னை அழைத்துக் கொண்டு போகிறவருக்கு ஒரு டிக்கெட். ஆகவே, ஒன்றரை டிக்கெட் ஆசாமியாகத்தான் இந்த இயக்கத்திற்கு வந்தோம்; அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சாரம் வளர்ந்தது. இவ்வளவு பெரிய அளவிற்கு என்னை தயாராக்கியது, என்னை ஆளாக்கியது தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் தத்துவம் தான்.
இன்றைக்கு எனக்கு இருக்கின்ற மனநிறைவுக்கு நன்றி செலுத்தவேண்டுமானால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் எல்லோரும் நன்றி செலுத்துவதைப்போல, அவருடைய நம்பிக் கைக்கு நாம் இன்னமும் உழைக்கவேண்டும்.
அவருடைய கொள்கை, இலட்சியத்திற்காக, பாதையில்லாத ஊருக்கெல்லாம் அவர் ஈரோட்டுப் பாதை அமைத்தார். அதற்கு நாம் நன்றி செலுத்தவேண்டும் என்ற உணர்வை இன்றைக்கும் நான் பெற்றிருக்கிறேன்.
எல்லாவற்றையும்விட
மனிதநேயம் மிக்கது!
இங்கே பதவிகளைப்பற்றி சொன்னார்கள்; அது முக்கியமல்ல! பொறுப்புகளைப்பற்றி சொன்னார்கள்; அது முக்கியமல்ல! நான் தொண்டனுக்குத் தொண்டன்; தோழர்களுக்குத் தோழன். தோழர்கள் அத்துணை பேரும் காட்டுகின்ற அன்பு, பாசம் இருக்கிறதே – அந்தப் பாசம் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது; மதங்களுக்கு அப்பாற்பட்டது; கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றையும்விட மனிதநேயம் மிக்கது!
இப்பொழுதுகூட எனக்கு அவதூறுக் கடிதங்கள் வருகின்றன. மிரட்டல் கடிதங்கள்; அசிங்கமாக எழுதப் பட்ட கடிதங்கள் வருகின்றன. அவை எல்லாவற்றையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.
‘‘பாராட்டைவிட ஒரு மனிதனுக்கு
வேறு தண்டனை இருக்க முடியாது!’’
பாராட்டுக் கடிதங்களை எப்பொழுதுமே பாதுகாத்து வைப்பதில்லை. ஏனென்றால், அவை தேவையில்லை. இப்பொழுதுகூட இங்கே இவ்வளவு நேரம் என்னை பாராட்டிப் பேசினார்கள். ‘‘பாராட்டைவிட ஒரு மனிதனுக்கு வேறு தண்டனை இருக்க முடியாது” என்று அய்யா அவர்கள் சொல்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எனக்கு ஒரு கடிதம் வந்தது – ‘‘உன் குடும்பத்தையே அழித்துவிடு வோம், நீ ஜாக்கிரதையாக இரு” என்றெல்லாம் எழுதியிருப்பார்கள். இன்னும் சில வாசகங்கள் மிகவும் அசிங்கமாக இருக்கும் – இந்த அரங்கத்தில் அதை சொல்வது அநாகரிகமாக இருக்கும் – ஆகவே, அவற்றைச் சொல்லாமல் விடுகிறேன்.
என்னுடைய வாழ்விணையர் அஸ்திவாரம் போன்றவர் – வெளிச்சத்திற்கு வரமாட்டார்!
என்னுடைய வாழ்விணையரைப்பற்றி சகோ தரர் திருச்சி சிவா அவர்கள் சொன்னார். நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்- நான் பொதுவாழ்வில் இத்தனை ஆண்டுகள் இருப்ப தற்கு ஓர் அடித்தளமாக இருப்பது- முதலில் என்னை இறக்கிவிட்ட ஆசிரியர் திராவிடமணி – அதற்குமேல் தந்தை பெரியார் – திராவிட இயக்கம்- இந்தக் கொள்கைகள். அதற்கு அடுத்து இன்னமும் நான் உற்சாகம் குறையாமல் இருக் கின்றேன் என்று சொன்னால், அதற்கு மிக முக்கிய மான காரணம் என்னுடைய வாழ்விணையர். ஆனால், அவர் வெளிச்சத்திற்கு வரமாட்டார். அஸ்திவாரம் போன்றவர் அவர். கட்டடம் மேலே தெரியும்; அஸ்திவாரம் புதைந்துதான் இருக்கும். அதுபோலத்தான் அவர்.
நான் நின்று கொண்டு பேசவேண்டாம், அமர்ந்து பேசுங்கள் என்று அவர் சொன்னார்.
உற்சாகம் இருக்கும்வரை நான் நின்றுகொண்டு பேசுகிறேன். அதிலொன்றும் கஷ்டமில்லை.
சில நேரங்களில் நான் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வரும்பொழுது, அங்கே உள்ள என்னுடைய மருத்துவ நண்பர்கள் சொல்வார்கள் – கூட்டங்களில் உட்கார்ந்து பேசுங்கள் என்று சொல்வார்கள். அவர்களின் அறிவுரைப்படி நான் உட்கார்ந்து பேசினால், என்னுடைய துணைவியார் சொல்வார், ‘‘ஏன் நீங்கள் உட்கார்ந்து பேசுகிறீர்கள்; வழக்கம்போல, நின்றுகொண்டே பேசலாமே” என்பார்.
மற்றவர்களாக இருந்தால் என்ன செய்வார்கள் ‘‘உட்கார்ந்து பேசுங்கள் என்பார்கள்; இல்லை என்றால், பேசவே பேசாதீர்கள்” என்று சொல்வார்கள்.
என்னுடைய துணைவியார், என்னைவிட கொள் கையில் தீவிரமான உணர்வு படைத்தவர். பொதுவாழ்க் கையில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில், அவர்களுடைய வாழ்விணையர்களு டைய பங்களிப்பு என்பது மிகமிக முக்கியமானது. அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
‘‘உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன்’’ என்று மிரட்டல் கடிதங்கள் வரும்!
எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது என்று சொன்னேன் பாருங்கள், அதில், ‘‘உன் குடும்பத்தையே அழித்து விடுவேன் – ஆரியத்தில் வீரியம் கொண்டவர்கள்’’ என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. அந்தக் கடிதத்தைப் பொதுக்கூட்டத்திலேயே படித்துக் காட்டினேன், அசிங்கமான வார்த்தைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு.
ஆனால், ஒருபோதும் என் குடும்பத்தை உன்னால் அழிக்க முடியாது. காரணம் என்னவென்றால், ‘‘நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், ஆரியமே! நன்றாகத் தெரிந்துகொள் நீ – 31 அல்லது பழைய 13 முதல் மெயின் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையாறு என்பது எனது முகவரி இல்லை. நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். என் குடும்பம் என்பது உலகம் முழுவதும் இருக்கின்ற திராவிட இயக்கத்தவர்கள் – எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை அழிக்க முயன்றால், நீ அழிந்து போவாய்!” என்று நான் சவால் விட்டுச் சொல்கிற அளவிற்கு அந்த உணர்ச்சியை அவர்கள் தந்தார்கள்
தந்தை பெரியார் என்கிற மிகப்பெரிய பேராயுதம் – போராயுதம் – அறிவாயுதம்!
எனவே, பொதுவாழ்க்கை – அந்தப் பொதுவாழ்க் கையில் தோழர்கள் காட்டுகின்ற உற்சாகம். கொள்கையில் இருக்கின்ற நாணயம், உறுதி, தந்தை பெரியார் என்கிற மிகப்பெரிய பேராயுதம் – போராயுதம் – அறிவாயுதம் இவை அத்தனையும் இருப்பது. இவை அத்தனையும் தாண்டி, நம்முடைய தோழர்களுடைய குடும்ப உணர்ச்சி. எங்கள் கொள்கைக் குடும்பமே அதுதான்.
இங்கே சொன்னார்களே, குடும்பம் என்று – தண் ணீரைவிட ரத்தம் கெட்டியானது; ஆனால், கொள்கை அதைவிட கெட்டியானது – இதுதான் திராவிட இயக்கம்.
அந்தக் கொள்கையால் பிணைக்கப்பட்டு இருக்கி றோம். அந்தக் கொள்கைப் பாசத்தினால்தான் அய்யா – அண்ணா – சகோதரர் என்று இப்படி ஒரு குடும்பமாக இருக்கிறோம்.
எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம், என்ன ஜாதி என்பதெல்லாம் முக்கியமல்ல.
இனமும், கொள்கையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் நம்மை இணைத்திருக்கின்றன!
இனமும், கொள்கையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் நம்மை இணைத்திருக்கின்றன. அதனால்தான் இந்தக் கொள்கைகள் வெற்றி பெறுகின்றன.
யார் எதிர்த்தாலும், எப்படிப்பட்ட கொம்பன்கள் வந்து இங்கே ஆட்டம்போட்டாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.
இங்கே, இரண்டு, மூன்று உதாரணங்களைச் சொன்னார்கள்; அதைப்பற்றி நம்முடைய தோழர்களும் பேசினார்கள். கருப்புச் சட்டையைப்பற்றி சொன்னார்கள்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு கருப்புச் சட்டை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டார்கள்; பிறகு இல்லை அப்படி சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று சொன்னார்கள். சுற்றறிக்கைத் திரும்பப் பெறப்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள்.
அதைவிட மிக முக்கியமாக இயக்கத்தவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மதுரை யில் கருப்புச் சட்டை மாநாடு இரண்டு நாள் என்று அறிவித்து, முதல் நாள் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. அடுத்த நாள் மாநாட்டுப் பந்தலை எரித்தார்கள்; கருப்புச் சட்டை அணிந்தவர்களை எல்லாம் அடித்தார்கள். ஆனால், அந்த இடத்தில்தான் பிற்காலத்தில் அய்யா விற்கு சிலை வைக்கப்பட்டது.
நமக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை!
‘‘மரண சாசனம்” என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் திராவிட நாடு பத்திரிகையில் கட்டுரை எழுதி னார். ஆனால், அய்யா அவர்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும்; தயாராக இருங்கள்; ஆனால், நமக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை” என்று சொன்னார்கள்.
இன்றைக்கு என்ன சூழ்நிலை தெரியுமா? கருப்புச் சட்டையை அணிந்துவராதீர்கள் என்று அன்று சொன் னார்கள்.
சுப.வீ. அவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்லும் பொழுது, யாரோ ஒரு காவல்துறை நண்பர் உள்ளே விட மறுத்தார் என்று சொன்னார்.
நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் எல் லாம் கருப்புடைதானே அணிந்திருக்கிறார்கள் என்று பதில் சொன்னார்கள்.
திராவிடம் எங்கு வெற்றி பெற்றது?
இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெரியார் எங்கு வெற்றி பெற்றார்? திராவிடம் எங்கு வெற்றி பெற்றது? கருப்புச் சட்டை எப்படி வெற்றி பெற்றது? என்றால், கருப்புச் சட்டை தைத்து வைக்காத கட்சியினரே இல்லை இன்றைக்கு.
எல்லாத் தலைவர்களும் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள்; எல்லா கட்சிகளிலும் கருப்புச் சட்டை இருக்கிறது. காரணம், எவ்வெப்பொழுதெல்லாம் போராடவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப் பொழுதெல்லாம் எல்லா தலைவர்களும் கருப்புச் சட்டை அணிந்துகொண்டுதான் களத்திற்கு வரு கிறார்கள்.
கருப்புக்கு என்ன பெருமை?
இதைவிட கருப்புக்கு என்ன மரியாதை!
கருப்புச் சட்டை இப்பொழுது எதைக் காட்டு கிறது – களப் போராளிகளாக இருக்கவேண்டுமா? நியாயம் கேட்கவேண்டுமா? கிளர்ச்சிகள் செய்யவேண்டுமா? அதற்கு ஒரே ஓர் அடையாளம் என்ன? கருப்புச் சட்டை என்று ஆக்கப்பட்டு விட்டது. இதைவிட கருப்புக்கு என்ன பெருமை! இதைவிட கருப்புக்கு என்ன மரியாதை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அடுத்தபடியாக ஒன்றை மிக அழகாகச் சொன்னார்; அய்யா – அண்ணா – கொள்கைகள் என்று.
அண்ணா, அய்யாவைவிட்டு பிரிந்தார் என்றவுடன், ஆரியம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. வாழ்நாளிலேயே இராஜகோபாலாச்சாரியார், யாராவது ஒருவரிடத்தில் ஏமாந்திருப்பார் என்று சொன்னால், அது நம்முடைய மதியூகியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களிடம் தான்.
தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி!
அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஏனென்றால், இன்றைய அரசியலில் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பணி என்பது இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணமே, நண்பர்களுடைய ஒத்துழைப்பு, தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி; உங்களுடைய அன்பு, ஆதரவு; ஆட்சியாளர்களுடைய மிகப்பெரிய தெம்பு – இவையெல்லாம் ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட மிக முக்கியமான அடிப்படை – எதிரிகள், எதிரிகள், இன எதிரிகள்!
அன்றைய எதிரிகள் நாணயமான எதிரிகள்; இன்றைய எதிரிகள், நாணயமற்ற எதிரிகள்!
அந்த எதிரிகள் வாலாட்டுகின்ற வரையில், எங்களு டைய உணர்ச்சிகள் குறையாது. அந்த எதிரிகள் பல ரூபத்தில் வருகிறார்கள். அன்றைய எதிரிகள் நாணய மான எதிரிகள்; இன்றைய எதிரிகள், நாணயமற்ற எதிரிகள்.
அந்த எதிரிகளையெல்லாம் சமாளிக்கக்கூடிய வியூ கத்தை பெரியார் தந்திருக்கிறார்; இந்த இயக்கம் தந்திருக் கிறது.
இன எதிரிகள் எந்த ரூபத்தில் வந்தாலும், நாம் வென் றிருக்கின்றோமே தவிர, திராவிடம் வெற்றிருக்கின்றதே தவிர ஒருபோதும் தோற்றதாக வரலாறு கிடையாது. அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியார் இராமசாமி கல்வி நிலையம்!
அண்ணா பிரிந்த பிறகு ஒரு நிகழ்ச்சி கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள நாகரசம்பட்டி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடம். பெரியார் இராமசாமி கல்வி நிலையம் என்று பெயர் வைத்து கற்றுக்கொடுக்கிறார்கள் அந்த ஊர் கிராமத்து மக்கள்.
அதற்கு முன், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி அவர்களுடைய தலைமையில் ஒரு பகுதிக்கு மட்டும் பெயர் வைத்தார்கள். அந்த ஊரே பெரியாருக்கு வேண் டிய ஊர்; பிறகு முழுக் கட்டடம் கட்டிய பிறகு, அண்ணா ஆட்சிக்கு வந்தார். அன்றைய காலகட்டத்தில் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். என்னை அழைத்து, தலைமை தாங்கவேண்டும் என்று சொன்னார்கள்.
நான் வேடிக்கையாக சொன்னேன், பழைய ‘விடுதலை’ ஆசிரியர், புதிய ‘விடுதலை’ ஆசிரியர் எல் லோரும் இருக்கிறோம்; ‘விடுதலை’யை உருவாக்கியவர் தந்தை பெரியார் என்று சொன்னேன்.
(தொடரும்)