கி.வீரமணி
பொறுமை – சகிப்பு
‘நல்ல வேளையாய்’ நம்மில் ஒருவர் இருவர் பாமர மக்கள் பலாத்காரத்தால் உயிர்விட நேர்ந்துவிட்டால் கண்டிப்பாய் நமக்கு வெற்றி என்பது திண்ணம், வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கு முக்கிய காரணம் எல்லாம் நமது பொறுமையும் சகிப்புமேயாகும். அங்குள்ள பாமர மக்கள் நம்மை அடித்தார்கள்; கத்தியால் குத்தினார்கள்; கண்களில் சுண்ணாம்பு பூசினார்கள்; 2, 3 தடவை தண்டித்தார்கள். இவ்வளவுக்கும் சத்தியாக்கிரகிகள் பொறுமையாய் இருந்து சகித்துக் கொண்டிருந்ததால் நாம் வெற்றியடைந்தோம்.
ஆதலால் பொறுமையும் சகிப்பும் இல்லாத சத்தியாக்கிரகம் வெற்றி தராது. நாம் சாத்வீகத்துக்கும் உறுதியுடனிருந்தால் சர்க்காரும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்கள் எத்தனை பேர்களை ஜெயிலில் வைக்க முடியும்? நம்மில் ஓர் ஆள் பாமர மக்களால் அடிபட்டு இறந்தவுடன் சர்க்கார் நூற்றுக்கணக்கான போலீஸ் காரர்களைக் கொண்டு வந்து போட்டு நமக்கு அடி விழுகாமல் காப்பாற்ற அங்கு காவல் காப்பார்கள். இல்லாவிட்டால் நம்மை கைது செய்வார்கள். எத்தனை பேரைத்தான் கைது செய்ய முடியும் என்பதைப் பார்த்து விடலாம். ஆகையால், நாம் சாத்வீகத்துடன் சத்தியாக்கிரகம் தொடங்கினால் நமக்குப் பணமும் ஆள்களும் வந்து குவிந்தவண்ணமாய் இருக்கும்.
நமது கடமை
திருவாளர்கள் சவுந்திரபாண்டியன், சிவராஜ், பாலகுருசிவம், முனிசாமிப்பிள்ளை முதலியவர்கள் எல்லாம் இதில் முனைந்து நிற்பதாக வாக்குக் கொடுத்திருக்கையில் உங்களுக்கு பணத்திற்காவது ஆள்களுக்காவது பஞ்சம் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஆகையால் பம்பாய் மாகாண நமது சகோதரர் பூனாவில் சத்தியாக் கிரகம் ஆரம்பித்து நம்மைத் தட்டி எழுப்பியதற்காக நாம் அவர்களுக்கு நம்முடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் வரும்படி நாம் அவர்களை மனமார பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம்” என்று பேசி முடித்தார். உடனே தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பெருத்த கரகோஷத்துடன் நிறைவேறிற்று. அக்கிராசனர், யாருக்காவது ஆட்சேபனை உண்டா என்று கேட்டார். ஒருவர்கூட ஆட்சேபிக்கவே இல்லை.
பிறகு அக்கிராசனர் தனது முடிவுரையாக சில வார்த்தைகள் சாத்வீகத்தைப் பற்றி பேசினார்.
பிறகு கடைசியாக திரு.சாமி சகஜாநந்தம் தலைவருக்கும் உபந்நியாசகர்களுக்கும் வந்தனோபசாரம் சொல்லுகின்றேன் என்று எழுந்து, சத்தியாக்கிரகம் உயர்ந்த ஜாதி இந்துக்களால் செய்யப்பட வேண்டுமே ஒழிய, நாம் செய்ய வேண்டியதில்லை என்றும், ஜெயிலுக்குப் போனால் பெண்டு பிள்ளைகளுக்கு யார் சாப்பாடு போடுவார்கள் என்றும், திரு.ராமசாமி பல தடவை ஜெயிலுக்குப் போய் அனுபோகமிருப்பதாலும், அவருக்கு சாப்பாட்டிற்கு இருப்பதாலும், அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் என்றும், வைக்கம் முதலிய சத்தியாக்கிரகத்தில் ஜெயிலுக்குப் போனவர்கள் இன்னமும் கஞ்சிக்கு அலைகின்றார்கள் என்றும், நாம் நன்றாகப் படித்த பிறகுதான் இவ்வித உரிமைக்கு யோக்கியதை உடையவர்களாவோம் என்றும், இவர்களுக்கு அக்கறை இருக்குமானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்டும் என்றும், சட்டசபையில் தனக்குப் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்களும் ஆதரவாயில்லை என்றும், ஆதலால் முதலில் பார்ப்பனர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் போய் பிரச்சாரம் செய்யட்டும் என்றும் சொன்னார். அக்கிராசனர் இதற்கு விடை அளிக்கும்படி திரு.ஈ.வெ.ராமசாமியைக் கூப்பிட்டார்.
அறியாமையே பெரியார் அவர்கள் பெருத்த கரகோஷத்தினி டையே எழுந்து பேசியதாவது:-
சகோதரர்களே! சாமி சகஜாநந்தம் பேசி இருப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் இழிவை நீக்க வேறு சமூகத்தார், அதிலும் உங்களைக் கொடுமைப்படுத்தி, அதனால் வாழும் சமூகத்தார் பாடுபட வேண்டும் என்று சொல்லுவது பரிகசிக்கத்தக்கதாகும். அந்தப்படி நீங்கள் எதிர்பார்ப்பதும் மிக்க அறியாமையேயாகும். மேல் ஜாதிக்காரர் என்பவர் எப்போதும் உங்களுக்கு நன்மை புரிய வரமாட்டார்கள். அன்றியும் உங்கள் முன்னேற்றத்தில் தடை செய்யாமல் இருக்கவும் மாட்டார்கள். தவிரவும் உங்கள் சுயமரியாதைக் குறைவுக்கு நீங்கள் பாடுபடாமல் வேறு யார் பாடுபடுவார்கள்?
தவிர, நீங்கள் ஜெயிலுக்குப் போனால் உங்கள் பெண்டு பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள் என்று சொல்லுவது கோழைத்தனமேயாகும். தனது பெண்டு பிள்ளையைக் காப்பாற்றவே உலகத்தில் இருக்கும் மனிதன், ஒரு நாளும் சுயமரியாதை அடைய முடியாது. நமது நாட்டுப் பொது அடிமைத்தனத்திற்கே இதுதான் காரணம். நாம் செத்துப் போனால் நமது பெண்டு பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள் என்று எண்ணுவது அடிமைத்தனத்தில் எல்லாம் முதலாவது அடிமைத்தனம். நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் வாழ வேண்டியது முக்கியமா – அல்லது உங்களை ஈனஜாதி என்று சொல்லி கழுதைகளும் நாய்களும் மலம் தின்னும் பன்றிகளும் நடக்கும் தெருவில் உங்களை நடக்கக் கூடாதென்றும், மலம் கழுவும் குளங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்றும், மலத்தைத் தொடுவதைவிட உங்களைத் தொடுவது கேவலமென்றும் பிறர் சொல்லுவதிலிருந்தும் அந்தப்படி இன்றும் நீங்கள் நடத்தப்படுவதிலிருந்தும் மீளுவது முக்கியமா – என்றுதான் உங்களைக் கேட்கின்றேன்.
சுயமரியாதை உணர்ச்சி உண்டா?
மேல்கண்ட இழிவை நீக்கிக் கொள்வதற்கு உதவாத உயிரும் அறிவும் எதற்காக உங்களுக்கு வேண்டும்? இந்த நிலையில் உள்ள உங்களுக்கு பெண்டுபிள்ளைகள்தான் எதற்காக வேண்டும்? நீங்கள் ஒவ்வொருவரும் என்ன இழிவும் அவமான மும் உங்களுக்கு இருந்தாலும் இருக்கட்டும். உங்கள் பெண்டு பிள்ளைகள் மாத்திரம் சவுக்கியமாய் இருந்தால் போதும் என்று நினைத்தீர்களானால் என்றுதான் நீங்கள் மனிதர்களாகப் போகிறீர்கள்? சுயமரியாதை உணர்ச்சி கடுகளவாவது இருந்தால் பெண்டுபிள்ளைகளோடு வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமா என்று கேட்கின்றேன்.
தவிர, ஜெயிலுக்குப் போகின்றவர்களின் பெண்டுபிள்ளை களுக்கு வேறு ஒருவன் சாப்பாடு போடுவதாயிருந்தால் இன்றைய தினம் நமது நாட்டில் 100க்கு தொண்ணூறு பேர்கள் ஜெயிலிலேயே வசிக்க விரும்புவார்கள். பெண்டு பிள்ளைகளுக்கு வேறு ஒருவரின் சாப்பாட்டை எதிர்பார்த்து ஜெயிலுக்குப் போவதில் தியாகமென்ன இருக்கின்றது என்று கேட்கின்றேன். தவிர, நீங்கள் நன்றாகப் படித்த பிறகுதான் இவ்வித உரிமைக்கு அருகர்களாவீர்கள் என்று அவர் சொல்லுகிறார்.
இதைக் கேட்க எனக்கு மிகவும் வருத்தமாயிருக் கின்றது. இந்த நாட்டில் 100க்கு 90பேர் கொஞ்சம்கூட படிக்காதவர்கள், அப்படியானால் அவர்கள் எல்லாம் நாயிலும் பன்றியிலும் கடையாய் இருக்கின்றார்களா என்று கேட்கின்றேன். இன்றைய தினம் உங்களை தெருவில் நடக்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு நடக்கும் மற்றவர்கள் எல்லாம் படித்தவர்களா? அன்றியும் உங்களைத் தவிர, மற்றபடி நடக்கும் நாய், பன்றிகள் படித்தவைகளா என்று கேட்கின்றேன்.
எப்போ படிப்பது?
தவிர, உங்களில் ரிக்ஷாவண்டி இழுப்பவர்கள் முதல் மலம் எடுத்து ஜீவிக்க நிர்ப்பந்தப்பட்டிருப்பவர்கள் வரை எந்தக் காலத்திற்குப் படித்து முடிவது? நீங்கள் எந்தக் காலத்தில் தெருவில் நடப்பது? கோயிலுக்குள் போவது? எந்தக் காலத்திற்கு இழிவை விலக்கிக் கொள்வது என்பது எனக்குச் சிறிதும் விளங்கவில்லை. தவிரவும், ஒருவன், படித்ததினாலேயே யோக்கியனாய் விடுவானா? மேல்ஜாதியாய் விடுவானா? என்றே கேட்கின்றேன். என்னைப் பொறுத்த வரையில் நான் படித்தவர்களில் அநேகரை அயோக்கியர்கள் என்றே அறிகிறேன்.
பெரிய பண்டிதர்களும் பெரியவித்வான்களும் தேவாரபிரபந்தம், ஆகமம், சாஸ்திரம், திருக்குறள் முதலியவைகள் படித்த மதப் பித்தர்களும் அயோக்கியர்களாகவே காணப்படுகின்றார்கள். பெரிய பெரிய ஆங்கிலேயர் பட்டம் பெற்றவர்கள் அதைவிட மோசமாயிருக்கிறார்கள். மதப் படிப்போ, ஆங்கிலப் படிப்போ, சாஸ்திர புராணப் படிப்போ படித்தவர்களில் யாராவது ஒரு யோக்கியர் இருக்கிறார் என்று சாமி சகஜாநந்தம் அவர்கள் சொல்லுவாரா என்று வணக்கமாய்க் கேட்கின்றேன். படிப்புக்கும் சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றேன். மனிதன் சுயமரியாதை பெறுவதற்கு எதைப் படிக்கவேண்டும் என்று சாமி சகஜாநந்தம் சொல்லுகின்றார் என்பது எனக்கு விளங்கவில்லை.
வயறு வளர்க்கும் வழியா?
இந்த நிலையில் கணக்குப் போடவும் கையெழுத் துப் போடவும் தெரிந்துவிட்டால் வயிறு வளர்க்க அது ஒரு வழியாகுமே தவிர, இழிவை ஒழித்து விடுமா? சுயமரியாதையில் கவலையும் உணர்ச்சியும் இருந்தால் எந்தப் படிப்பு இல்லாவிட்டாலும் மனிதனாக இருக்க முடியும். அதில்லாதவன் எந்தப் படிப்பு படித்தாலும் நடைப்பிணமாகத்தான் சுயநலக்காரனாய்த்தான் வாழ முடியும். இதில் ஒன்றும் சந்தேகமில்லை. என்னுடைய அனுபவத்தையே நான் சொல்லுகின்றேன். தவிர தமக்கு அக்கறை இருக்குமானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்டுமே என்கிறார்.
சட்டசபையின் யோக்கியதையை அறிந்த இவர் இப்படிப் பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சட்டசபையில் யார் இருக்கிறார்கள்? சர்க்காருக்கும், அதிகாரிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும், நம்பிக்கை உள்ள அடிமையாக எவர் நடந்து கொள்ளுகின்றார்களோ அவர்களே பெரிதும் நியமனம் பெறுகிறார்கள். 22 ஆயிரம் 30 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் எவர் செலவு செய்கின்றார்களோ அவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சுயபுத்தி உண்டா?
இந்தக் கூட்டத்திற்கு சுயபுத்தியோ, சுயமரியாதை உணர்ச்சியோ, பொதுநல ஆசையோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். சாமி சகஜானந்தம் இந்தத் தடவை ஒரு சட்டம் கொண்டு போனால் அடுத்ததடவை இவரை சர்க்காரும் பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதியார் என்னும் அதிகாரிகளும் கண்டிப்பாய் நியமிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இவ்வளவையும் மீறி யாராவது சட்டம் கொண்டு போவதாயிருந்தாலும் அச்சட்டத்தை சட்டசபைக்குக் கொண்டுவர ராஜப்பிரதிநிதி அனுமதி கொடுப்பாரா என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் மக்கள் பல ஜாதிகளாய் உயர்வு தாழ்வாய் ஒருவரோடு ஒருவர் போராடிக்கொண்டு இருந்தால்தான் நமது சர்க்கார் நிம்மதியாய் இருக்க முடியும். இல்லாவிட்டால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சர்க்காரின் மீது பாய்ந்து விடுவோம் என்கின்ற பயம் சர்க்காருக்கு எப்போதும் உண்டு.
சாஸ்திரத்தில் இதுவரை
கை வைக்காமல்..
கை வைக்காமல்..
ஆகையால், சுலபத்தில் சர்க்காரார் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். நாம் தகுந்த கிளர்ச்சி செய்து, தக்க தியாகம் செய்வதன் மூலம் பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் திருப்பிக் கொண்டு செல்வாக்குடன் இருக்கின்றோம் என்றால் சர்க்கார் ஒரு சமயம் இணங்கிவரக் கூடும். 25 வருஷமாய் விவகாரத்தில் இருந்த சாரதா மசோதாவுக்கு இது வரை சாக்குப் போக்குச் சொல்லி வந்த சர்க்கார் இன்று இணங்கியதன் கருத்து நம்முடைய கிளர்ச்சியே யாகும். மிஸ். மேயோ எழுதின புஸ்தகமும் சிவா என்கின்ற புஸ்தகமும் சைமன் கமிஷனை ஆதரித்ததற்கு கூலியும், வெளி அரசாங்கங்கள் நமது அரசாங்கத்தைப் பார்த்து நகைக்குமே என் கின்ற பயமும் இனிமேல் நீங்கள் எங்களுக்கு விரோதமாயிருந்தால் உங்கள் சாஸ்திரத்தில் இது வரை கை வைக்காமல் இருந்து உங்களுக்கு அனு கூலம் செய்து கொண்டு வந்ததிலிருந்து விலகிக் கொள்வோம் என்பதை பார்ப்பனர்களுக்கு காட்டி, அவர்களை மிரட்டுவதற்காகவுமே சர்க்கார் அனு கூலமாயிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆகையால் சட்டம் செய்வது என்பது சுலபமான வேலையல்ல. இன்றைய சர்க்கார் வெள்ளைக்காரர், பார்ப்பனர், பணக்காரர் ஆகிய மூவர்களுடைய கூட்டு வியாபாரமாய் நடைபெறுகின்றது. இம்மூன்று கூட்டமும் ஏழைகளுக்கு நன்மை செய்யவோ தீண்டா மையை விலக்கவோ சுலபத்தில் சம்மதிக்குமா என்று கேட்கின்றேன்.
சட்டத்தால் முடியாது.
தவிரவும், சீர்திருத்தமும் சுயமரியாதையும் சட்டம் கொண்டுவந்து ஓட்டு வாங்கி நிறைவேற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒருநாளும் முடியாத காரியம். ஓட்டு என்பது கூட்டுக் கொள் ளையே தவிர வேறில்லை. என்னுடைய உரிமையைக் கொடுக்கின்றாயா, அதற்காக உயிர்விடட்டுமா என்கின்ற கொள்கையுடைய மக்கள்தான் எங்கும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இந்தப்படி நடக்கின்றாயா? அல்லது ஜெயிலில் பிடித்துப் போடட்டுமா என்று சொல்லும் அரசாங்கம்தான் சீர்திருத்தங்கள் செய்திருக்கின்றது. அதை விடுத்து இம்மாதிரி காரியங்களுக்கு ஓட்டும் சட்டசபையும் ஜாலவேடிக்கையும் வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளை நிலையங்களேயாகும்.
தவிர, இங்கு செய்யும் பிரசாரத்தைப் பார்ப்பனர் களுக்கும் அல்லாதவர்களுக்கும் போய் செய்யட்டும் என்று சொல்லுகின்றார். பார்ப்பனர்கள் நமது பிரச்சாரத்தினால் புத்தி திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாய் இருந்தால் நியாயம் சொல்லலாம்.
நன்றாய் தெரிந்தே, எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய் விடுகின்றதோ என்று சுயநலங்கருதி குரங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்தப் பிரசாரத்தால் எப்படி மாற்றக் கூடும்? பார்ப்பனரல்லாதவர்களோ முக்கால் வாசிப்பேர் பார்ப்பனரைப் பின்பற்றுபவர்களாகவும் பார்ப்பனருக்கு தாசிமகனாயிருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலாயிருந்தால் போதும் என்று முட்டாள்தனமாய் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும் சரி, நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம்.
(தொடரும்)