தாய்க்கழகமாம் திராவிடர் கழகத் தலைவரின் பாராட்டால் புதுத் தெம்பு பெற்றேன்!
சென்னை, ஏப். 11 ஆளுநரின் அதிகாரம் என்னவென்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் வெல்வோம்; சட்டப் போராட்டம் தொடரும் என்றும், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத் தலைவரின் பாராட்டால் புதுத் தெம்பு பெற்றேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, ‘திராவிட மாடல்’ அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 1974 ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
மாநில உரிமை காக்கும் சட்டப்போரில்
சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்!
பேரறிஞர் அண்ணாவும் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள, உங்களில்ஒருவனான நான், மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.
மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை யின் வழியே ஒன்றிய பா.ஜ.க அரசு திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து நின்று, ‘‘இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை’’ என்பதில் உறுதியாக நின்று, ‘‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுத்தாலும், எங்கள் மாநில நலனைக் காக்கும் வகையில், மாநில அரசின் நிதியிலிருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை எங்களுக்கு உண்டு’’ என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மனித வள ஆற்றலாகத் தமிழ்நாட்டின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில்மறுசீரமைப்பில் நாடாளுமன்றத் தொகுதி களைக் குறைப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு திட்ட மிடுகிறது என்றதுமே, தமிழ்நாட்டைப் போல பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘‘நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள வகையிலேயே மாநிலங்களுக்கான விகிதாச்சாரம் தொடர வேண்டும்’’ என்பதையும், ‘‘மறு சீரமைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றும் முதல்குரல் கொடுத்திருப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் கை எடுத்திருப்பதும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது!
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதையும், ‘100 நாள் வேலைத்திட்டத்தில்’ ஒன்றிய அரசின் பங்கினை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் – மணிப்பூர் கலவரம், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கான உதவித்தொகை என, இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான குரலாக தி.மு. கழகத்தினரின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.
‘‘போராட்டம் ஒரு புறம்,
ஆட்சி நிர்வாகம் மறுபுறம்!’’
உரிமைக்கான குரலாகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். நீதிக்கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரை, உரிமைப் போராட்டம் ஓயவில்லை. ‘‘போராட்டம் ஒரு புறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம்’’ என
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியும் பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதாகவும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டபல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மய்யப்படுத்தியும் அமைந்துள்ளன.
2024–2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு 9.69% என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற்று,பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும், ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8 ஆம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது.
ஆளுநரின் அத்துமீறல்கள்!
பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப்பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம்.இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், ‘பல்கலைக்கழக வேந்தர்’ என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆளுநர் அவர்கள், உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதியதன்று.
ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னால் வெற்றி பெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே ஆளுநர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கே ஆளுநர் மறுத்துவந்த நிலையில் அது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. மேற்கு வங்கம், கேரளா என பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘‘பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார்’’ என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்றக்கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது, நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது.இந்தச் செய்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்த, உங்களில் ஒருவனானஎனக்குக் கிடைத்தவுடன்,உடனடியாக அவையில் இருந்து வெளியே வந்து, இந்த மகிழ்ச்சிகரமான வெற்றித் தீர்ப்பு குறித்த அறிவிப்பை எழுதி, அவைக்குச் சென்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வாசித்தேன்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன்!
எந்தச் சட்டமன்றத்தில், ‘‘தமிழ்நாடு’’ என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலைப் பேரறிஞர் அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினாரோ அந்தச் சட்டமன்றம்தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன்.
முதலமைச்சரான என் அறிவிப்பைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஆதரித்துப் பேசினார்கள்.
இந்த வழக்குத் தொடரப்பட்டதிலிருந்தே வழக்குரைஞர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள், ஆதாரங்கள் குறித்து கலந்துரையாடி வந்தேன்.
ஆளுநர் பதவி என்பது ஒன்றிய – மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான்!
தி.மு. கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ‘‘ஆளுநர் பதவி என்பது ஒன்றிய – மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான்’’ என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.
தீர்ப்பு வெளியான நாளில், கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி, வெற்றித் தீர்ப்பு கிடைத்திடக் காரணமாக இருந்த முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்குரைஞர்களைத் தொடர்பு கொண்டு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
‘வின்’சன்னாக வில்சன்!
இந்த வழக்கின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் வில்சன் நேரில் சந்தித்து என்னிடம் தீர்ப்பின் விவரங்களைத் தெரிவித்தபோது, தலைவர் கலைஞர் சொன்னது போல ‘வின்’சன்னாக வில்சன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டி மகிழ்ந்தேன்.
மாநில உரிமைக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் அரசு’ பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினரயி விஜயன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பாராட்டி கருத்து வெளியிட்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான செய்தியாக இந்தத் தீர்ப்பு இடம்பெற்றது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பெரியோர்கள் எனப் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாய்க் கழகத்தின் பாராட்டு!
வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். “சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களைச் சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள்” என்று வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.
நீண்ட பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஆசிரியர் அய்யா உடனே தனக்கேயுரிய சொல்லாற்றலுடன், “சவுகிதார் என்று பிரதமர்மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். ஆனால், நீங்கள்தான் சமூகநீதிக்கும், மாநில உரிமைக்குமான உண்மையான காவலர். மக்களின்காவலர்” என்று பாராட்டினார்.
‘நீட்’ தேர்வுக்கு எதிரான
நமது சட்டப்போராட்டம் தொடரும்!
தாய்க்கழகத்தின் பாராட்டு எப்போதுமே கூடுதல் உழைப்புக்குத் தெம்பு தரக்கூடியது. அதனால்தான், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9 ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சமூகநீதியிலும், மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
சமூகநீதிக்கும் – மாணவர்களுக்கும் – மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், ‘நீட்’ தேர்விலும் விலக்குப் பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதைத் தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும்.
‘‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’’ என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து, நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க., தன் போராட்டத்தைத் தொடரும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
– இவ்வாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.