போபால், ஏப்.10 ம.பி.யின் நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரி தேர்வு விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் ஒருவர் திருத்தும் காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா, விடைத்தாள் திருத்தும் பணிக்கான பொறுப்பு அதிகாரி ராம்குலம் படேல் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஷ்வாஸ் சாரங் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா கூறுகையில், ‘விடைத்தாள் திருத்தும் பணியை பேராசிரியர் ஒருவரிடம் கொடுத்தோம். அவர் அப்பணியை கடைநிலை ஊழியரிடம் கொடுத்துள்ளார். எனது பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கோரி உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.