‘இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு மேனாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பேட்டி!
புதுடில்லி, ஏப்.10– ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்’’ என்று ஒன்றிய அரசின் மேனாள் அட்டர்னி ஜெனரலும், ஆளுநரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடியவருமான முகுல் ரோகத்கி அவர்கள் ‘‘இந்தியா டுடே’’ ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார்.
மூத்த வழக்குரைஞர் முகுல் ரோகத்கி ‘இந்தியா டுடே’ ஊடகத்திற்கு அளித்த பேட்டி வருமாறு :–
நெறியாளர்: இப்போதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று பதவிவிலக வேண்டுமா?
மக்களே மேலானவர்கள்
முகுல் ரோகத்கி: முதலில் இது புதிய பாதையை உருவாக்கும் தீர்ப்பு. துணிச்சலான, தைரியமான தீர்ப்பு. மிக அரிதாக இதுபோன்ற தீர்ப்புகள் வரும். அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தியதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறேன். ஆளுநராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரும் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். ஆளுநர் மாநில அரசுக்கு தடையாக இருக்ககூடாது, மாறாக வினையூக்கியாக இருக்கவேண்டும் என்று பொருள்பொதிந்த முறையில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மக்கள் தான் அனைவருக்கும் மேலானவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமியற்றுமானால் ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டால் உடனடியாக சட்டமாகும் அல்லது அரசின் மறுபரிசீலனைக்கு அனுப்பலாம். மறுபரிசீலனைக்கு அனுப்பிய மசோதாவை அரசு திரும்பவும் ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கவேண்டும். நிதி மசோதா எனில் ஆளுநர் திருப்பி அனுப்ப இயலாது. மூன்றாவதாக, மாநில அரசின் சட்டத்திற்கும் ஒன்றிய அரசின் சட்டத்திற்கும் மோதல் இருப்பதாக ஆளுநர் கருதினால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இதைத் தவிர வேறு எதையும் ஆளுநரால் செய்ய முடியாது.
ஆளுநர் பதவி விலகவேண்டும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆளுநரின் காலம் தாழ்த்தும் செயலைக் குறிப்பிட்டே இவ்வழக்கில் என் வாதத்தைத் தொடங்கினேன். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் போதுமான கால அவகாசம் அளித்த போதும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆளுநரின் செயல் தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே ஆளுநர் பதவி விலகவேண்டும்.
நெறியாளர்:ஆனால் ஆளுநர் அவ்வாறு எவ்வித சைகைகளையும் காட்டவில்லையே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் பிரச்சினை உள்ளதே. இத்தீர்ப்பு அந்த மாநிலங்களிலும் எதிரொலிக்குமா?
முகுல் ரோகத்கி:ஆளுநர் பதவி விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. ஆளுநர் பதவி மீது உயர்மதிப்பு கொண்டிருப்பாரெனில் அவர் பதவி விலகவேண்டும். கேரளாவிலும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு உள்ளது, ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் பிரச்சினைகளை இத்தீர்ப்பு சரிசெய்யுமா என்பதை விட, அரrமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 141 ஆவது பிரிவின் படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.
சட்டமன்றத்தை முடக்க ஆளுநரால் முடியுமா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு நாடாளுமன்றச் சட்டத்திற்குச் சமமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றமும் கட்டுப்படவேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால் எதுவும் மாறாது என்று நினைப்பது தவறு. இன்னொரு காரணத்திற்கும் இத்தீர்ப்பு முன்னுதாரணமானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் தீர்மானித் துள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் மூன்று மாதத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கமுடியாது என்று சொற்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அரசமைப்புச் சட்டப்படி செயல்படுகிறது. சட்ட மன்றத்தை ஆளுநர் முடக்க முடியாது.
நெறியாளர்:இத்தீர்ப்பு ஆளுநர் நியமனத்தைப் பாதிக்குமா? ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதி நிதிகளாக செயல்படுகிறார்களே?
முகுல் ரோகத்கி:75 ஆண்டுகளாக ஆளுநர்கள் ஒரே மாதிரியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்த வரையில் ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும். ஆளுநர் பதவி என்பது அடையாளப் பதவி மட்டுமே. அடையாளப் பதவிக்கு ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கவேண்டும்? இன்றைய காலத்தில் ஆளுநர் பதவிக்கு என்ன தேவை உள்ளது? தேர்தல் காலத்தில் பதவிப்பிரமாணம் செய்ய மட்டுமே ஆளுநர் தேவைப்படுகிறார். அதைக்கூட சட்டத்தின் மூலம் மாற்றிவிடலாம். பேரவைத் தலைவர் கூடத் தரலாம். வேறு ஒருவருக்கு கூட அந்தப் பொறுப்பைத் தரலாம். பதவிப்பிரமாணம் செய்து வைக்க மட்டுமே தேவைப்படும் ஆளுநர் பதவியை ஒழித்து விடலாம்.
மக்களுக்கு மேல் மன்னர் தேவையில்லை. நீதிபதிகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே நியமிக்கலாம் என்ற வாதம் எழுந்தபோது மக்க ளுக்கு மத்தியில் மன்னர் தேவையில்லை என்று அம்பேத்கர் சொன்னார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அப்பொறுப்பைத் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் தான். உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிக்கு இது பொருந்துமெனில் ஆளுநருக்கும் பொருந்தும்.
இவ்வாறு மூத்த வழக்குரைஞர் முகுல் ரோகத்கி பேட்டியளித்தார்.