சென்னை, ஏப்.9- பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று (8.4.2025) நடந்தது.
கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பள்ளிக்கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு மறுத்த நிலையில், அதை மாநில அரசு சார்பில் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை விடுத்து இருமொழிக்கொள்கையை செயல்படுத்துவோம் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2 லட்சத்து 603 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. நமக்கு பெருமை என்றாலும், அந்தத் தொகையை நாம் இழந்திருக்கிறோம் என்பதும் உண்மை.
பள்ளிக் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.