சென்னை, ஏப். 8 சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சிறீசாய்ராம் பொறியியற் கல்லூரியில் 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் 1,131 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சிறீசாய்ராம் பொறியியற் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள லியோமுத்து உள்விளையாட்டு அரங்கத்தில் 6.4.2025 அன்று நடைபெற்றது. விழாவுக்கு சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை தாங்கினார்.
சாய்ராம் கல்விக்குழும தலைவர் கலைச்செல்வி லியோமுத்து விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் இஸ்ரோ’ ‘சந்திரயான்-3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேல் தலைமை விருந்தினராகவும், ‘கிஸ்ப்ளோ’ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
விழாவில் 1,131 மாணவ-மாணவிகள் (இளநிலை மற்றும் முதுநிலை) பட்டங்கள் பெற்றனர். துறைவாரியாக முதலிடத்தை பிடித்த 39 மாணவர்களுக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் பட்டங்களை வழங்கி பேசும்போது, எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார். தற்போதைய சூழலில் பொறியியல் மாணவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்பு விருந்தினர் சுரேஷ் சம்பந்தம் பேசினார்.
விழாவில் சாய்பிரகாஷ் லியோமுத்து பேசும்போது, இல்லாதவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் அருகில் உள்ள கிராமங்களை சாய்ராம் கல்லூரி தத்தெடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி மதிப்பில் லியோமுத்து பெயரில் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.’ என்றார்.
சாய்ராம் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜா.ராஜா பட்டமளிப்பு அறிக்கையை வாசித்தார். விழாவில் சாய்ராம் கல்வி குழுமத்தின் இயக் குநர் ரேவதி சாய்பிரகாஷ், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆர்.பிரேமானந்த் மற்றும் கல்லூரியின் உயர் அலுவலர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.