சென்னை, ஏப்.8 வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.
தவணை முறை திட்டம்
சட்டப் பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது 7.4.2025 அன்று நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்: வீட்டுவசதி வாரியத்தால் 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும். ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிா்கொள்ள தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டட அனுமதி பெற கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
குடிசைத் தொழில் – பசுமை வகை
குடிசைத் தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடியாக அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 500 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் ஆலைக் கட்டடங்களுக்கு இந்த அனுமதி முறை பொருந்தும். 2016-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.
நீா்நிலைகளுக்கு அடுத்துள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு நீா்நிலைப் பக்கத்தில் எந்தத் திறப்புகளும் இல்லாத வகையில், சுற்றுச்சுவா் அமைக்கப்படுமெனில் பள்ளிக் கட்டடங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளைப் பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகனம் நிறுத்துவதற்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவி புரிய இப்போது செயல்பாட்டிலுள்ள ஒற்றைச் சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் முழுமைத் திட்டம் ‘மாஸ்டா் பிளான்’ தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.