சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தகவல்
மதுரை, ஏப்.8 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட் டம் மே 20-இல் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் எம்ஏ. பேபி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் தேசியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்ஏ. பேபி மதுரையில் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி, ‘தூக்குமேடை’ தியாகி பாலு ஆகியோரின் சிலைகளுக்கு கட்சி அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
வலிமையான கூட்டணி தேவை
நாட்டில் நரேந்திர மோடி -அமித் ஷா தலைமையிலான பாசிச ஆட்சி வேரூன்றியுள்ளது.ஜனநாயகம், மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத் தயாரிப்பாளர் மீது அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் பாசிச எண்ணத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் திமுக தலைமை யில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற கூட்டணியே பாஜகவை தோற்கடிக்கக் காரணமானது. தமிழ்நாட்டைப் போன்று பிற மாநிலங்களிலும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும்.
அனைவரும் பங்கேற்க வேண்டும்
மே 20-ஆம் தேதி நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். பாஜக ஆட்சியை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கவேண்டும்.
மதுரையில் நடந்த அகில இந்திய மாநாட்டுக்கு மிக உறுதுணையாக இருந்த தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி, கே. சாமுவேல் ராஜ், எஸ்.கண்ணன் மதுரை மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் (மாநகர்), கே. ராஜேந்திரன் (புறநகர்), மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்கே. பொன்னுத்தாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.