முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்குமா? உச்சநீதிமன்றம் கேள்வி

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.7- இந்தியாவில் முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளத்தைச் சோ்ந்த சீபா (24) என்ற பெண் முதுகு தண்டுவட தசைநார் சிதைவால் பாதிக்கப் பட்டுள்ளார். இது அரிய வகை மரபணு நோயாகும். இதுபோன்ற அரிய வகை நோய் பாதிப்புக்கான சிகிச்சைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை நோயாளிகள் நிதியுதவி பெறமுடியும். இந்த நிதியுதவியுடன் கூடுதலாக ரூ.18 லட்சம் மதிப்பிலான மருந்துகளை சீபாவுக்கு வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த பிப்.24-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதைத்தொடா்ந்து உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக அந்த மனு 4.4.2025 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சீபா தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆனந்த் குரோவா் ஆஜராகி, ‘முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கு வழங்கப்படும் ரிஸ்டிபிலாம் மருந்தின் விலை பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குறைவாக உள்ளன. இதில் அந்நாடுகளின் அரசுகள் தலையிட்டதால், அங்கு அந்த மருந்தின் விலை குறைவாக உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘பாகிஸ்தானிலும், சீனாவிலும் ரிஸ்டிபிலாம் மருந்தின் விலை இந்தியாவில் உள்ளதைவிட குறைவாக இருக்குமானால், அதே குறைந்த விலையில் அந்த மருந்தை இந்தியாவிலும் கிடைக்கச் செய்ய முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும்’ என்று உத்தர விட்டு, அந்த மருந்தை உற்பத்தி செய்யும் ஹாஃப்மென் லா ரோஷ் நிறுவனத்துக்கு தாக்கீது அனுப்பியது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை கேரள உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *