கூறுவது கருப்புச் சட்டைக்காரர்கள் அல்லர்!

viduthalai
4 Min Read

2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்:
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில்
6-ந்தேதி ராமநவமி விழா

சென்னை, ஏப்.3- திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம திருக்கல் யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் யாகசாலையில் விசேஷ ஹோமங்கள் மற்றும் ஏழு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் உள்ள சிறீராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் இன்று (வியாழக்கிழமை) காலை விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது. அக்னிமதனம் என்று அழைக்கப்படும் அக்னியை உருவாக்கி உரிய பூஜைகளுக்குப் பின் யாகம் வளர்க்கப்ப டுகிறது.
தொடர்ந்து,ராமநவமியையொட்டி6-ந்தேதி காலை 8.45 மணிக்கு சீதா சமேத சிறீராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சாமிக்கு 2 ஆயிரம் லிட் டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் ஆன விசேஷ திருமஞ்சனம் நடக் கிறது. 7-ம் கால பூஜைகளுக்கு பிறகு திருமஞ்சன மும், புஷ்பங்களால் அபிஷேகமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திரு மகன் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன். கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர்கள் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினத்தந்தி 3.4.2025 பக்கம் 7

இப்படி ஒரு செய்தி வெளி வந்துள்ளது. ‘‘கடவுள் உருவமற்றவன் – அரூபி’’ என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, எண்ணற்ற உருவப் பொம்மைகளை உருவாக்கி, கடவுளுக்கு மனைவி உண்டு, பிள்ளைக் குட்டிகள் உண்டு என்று தலப் புராணங்களையும், புராணங்களையும் கற்பித்து, கோயில் கட்டிக் கும்பிடுவதும், தட்சணைகளைக் கொடுத்து கடவுளின் அருளை வேண்டுவதும், உண்டியலில் பணத்தைக் கொட்டி, கடவுளின் கடாட்சத்தை தன் பக்கம் திருப்பச் செய்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று காத்திருப்பதும் – எவ்வளவுப் பெரிய மூடத்தனமும், வியாபாரக் கொள்ளையும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

பக்தி ஒரு ஃபேஷனாகவும் (Fashion), பக்தர்களிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் கூறியதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
இதில் ஆறுகால பூஜையும், படையலும் இன்னொரு பக்கம். பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற பொருள்களால் அபிஷேகமாம்.
‘பச்சிளம் பிள்ளை பாலுக்கு அழுகையில் குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?’ என்று கழக ஊர்வலத்தில் முழக்கங்கள் போடுவதுண்டு.
கழகம் – கடவுள் இல்லை என்று சொல்லும் ஓர் இயக்கம் என்று ஒரு வரியில் சொல்லி ஒதுக்கி விடுபவர்களுக்கு
இதோ ஒரு செய்தி 26.2.2014 நாளிட்ட ‘மாலை மலர்’ ஏட்டில் வெளி வந்ததுதான்.

‘‘நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள பகவதி, மாரியம்மன், இளையாண்டி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில், தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குசென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேரந்தவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆடி மாதத் திருவிழாவையொட்டி வருகிற 27.4.2014 அன்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் உள்ள அம்மன் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அவ்வாறு செல்லும் போது எங்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பாலாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
எனவே, எங்களை கோவிலுக்குள் அனுமதித்து பாலாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.’’
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பூமி ராஜன், கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:
‘‘நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு. தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தைகள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஒரு அத்தியாவசிய உணவுப்பொருள் என்பதை மனுதாரரும், அவருடைய கிராமத்தினரும் நன்கு அறிவர்.

இதுபோன்ற அத்தியாவசிய உணவுப்பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றவர்களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கலாம் என்பதை மனுதாரர் அறிய வேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.”
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கூறியிருப்பது கருப்புச் சட்டைக்காரர்கள் அல்லர்; கருப்புக் கோட்டு அணிந்த இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான் இவ்வாறு கூறியிருக்கின்றனர் என்பது நினைவிருக்கட்டும்!

பக்தர்கள் பதறாமல் சிந்தப்பார்களாக!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *