தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஓட்டேரியில் கழகக் கூட்டம்

viduthalai
6 Min Read

கொளத்தூர் தொகுதி, அரசு மருத்துவமனைக்கு
சுயமரியாதை மருத்துவர் பெரியார் பெயர்

சென்னை, ஏப்.6- கடந்த 29.3.2025 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி சாலையில் மாலை 6.30 மணிக்கு சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத் திட்டங்களைப் பரப்புரை செய்தும், கொளத்தூர் தொகுதி – பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் கார்த்திக் நல்லதம்பி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் வரவேற்புரையாற்றினார். மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்கவுரையாற்றினார்.

வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், துணைத் தலைவர் நா.பார்த்திபன், இளைஞரணித் தலைவர் வ.கலைச்செல்வன், துணைத் தலைவர் பா.பார்த்திபன், பெரியார் பெருந்தொண்டர் கி.சிட்டிபாபு, ஓட்டேரி இரா.எம்ரோசு, ஓட்டேரி கழக தலைவர் சு.த.சேகர், சே.இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மகளிரணித் தோழர் புரசை க.அன்புமணி, தந்தை பெரியார் பற்றிய பாடல்களைப் பாடினார். க.கனிமொழி (ஆங்கிலத்தில் பேசினார்), ஒட்டேரி கழக மேனாள் தலைவர் இரா.எம்ரோசு, மேனாள் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் வெ.நல்லதம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் ச.இராஜி, திரு.வி.க. நகர் தெற்குப் பகுதி திமுக தோழர் எஸ்.பாபு, புரசை ச.அன்புச்செல்வன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, கழக சொற்பொழிவாளர் ஆரூர் தே.நர்மதா சிறப்புரையாற்றினர்.

ஆருர் தே.நர்மதா

ஆரூர் தே.நர்மதா உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் கல்வியைப் பெற்றால்தான் அவர்கள் முன்னேற முடியும் என்பதற்காக அந்த மக்களிடம் கல்வியைக் கொண்டு செல்வதை முதலாவது பணியாக திராவிடர் கழகம் மேற்கொண்டது.
நம்முடைய மக்களில் தாமஸ் ஆல்வா எடிசன், கலிலியோ போன்ற அறிஞர்கள் தோன்றாததையும், அறிவியல் வளர்ச்சி இல்லாமையும் கண்டு வருந்தியவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி

அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, மூன்று வேளை சோற்றுக்கு வழி இன்றி பஞ்சம் பிழைக்க என்று தமிழ்நாட்டுக்கு பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து வருகின்ற இளைஞர்களுக்குக் கல்வி கொடுத்து – பட்டதாரிகளாக்கி, ஆசிரியர் பணி புரிபவர்களாகவும் ஆக்கிக் காட்டுகின்ற கல்விப் புரட்சி மாநிலம்தான் தமிழ்நாடு. அதை அவர்கள் பெருமையோடு பேட்டி வாயிலாக மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.
ஒன்றிய அரசு திணிக்கின்ற மும்மொழிக் கொள்கையைத் ஏற்க மறுக்கின்ற தமிழ்நாடு எந்த வகையில் பின்தங்கியுள்ளது?
தொடக்கக் கல்வியைப் பயிலாமல் ஒரு பிள்ளைகூட இல்லை என்று. 100க்கு 100 கல்வி என்னும் நிலையை உண்டாக்கியுள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார். கல்விப் புரட்சியை செய்துள்ள மாநிலம் தமிழ்நாடு.

பெண் கல்வியில் ஆண்களுக்கு நிகராக – ஆண்களை விடப் பெண்களைப் படிக்க வைத்து அழகு பார்த்து வருவது தமிழ்நாடு. சுயமரியாதையுடன் பெண்கள் மணம் முடித்துக் கொள்வதற்கு வழி வகுத்ததும் இந்த இயக்கமாகும்.

ஆத்திகர்கள் – நாத்திகர்கள் மட்டுமல்லாது – அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது ‘திராவிட மாடல்’ அரசு.
திராவிட சமுதாயத்தைத் திருத்தி – மானமும் அறிவும் உள்ள மக்களாக வாழ வைத்திட விரும்பிய தந்தை பெரியாரின் விழைவை – ‘திராவிட மாடல்’ அரசின் வழிகாட்டியாக விளங்குகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தொண்டறம் புரிந்து நிறைவேற்றிக் காட்டுவோம் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

வழக்குரைஞர் பா.மணியம்மை

வழக்குரைஞர் பா.மணியம்மை உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
கொளத்தூர் அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயர் வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்ற கூட்டமாகவும் இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.

பெண்கள் சமத்துவம் பெற்றால், பெண்களை முன்னிறுத்தினால் சமுதாய அளவில் குடும்பத்திற்கே தனித் தகுதி அமையும் என்று பெண்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதில் சாதனை செய்தது இந்த இயக்கம் – தந்தை பெரியார்.
“எனது தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள். துறவிக்காவது மோட்சத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த ஆசைகூட இல்லாமல் பொதுத் தொண்டு செய்வதை உற்ற கடமையாகக் கொண்டவர்கள் எனது தோழர்கள்” என்பார் தந்தை பெரியார்.

நோய் நீக்குகின்ற மருத்துவர் பெரியார்

மாட்டு மூத்திரத்தைக் கலந்து ‘பஞ்சகவ்யம்’ என்று பார்ப்பான் கொடுப்பதைக் குடித்துவிட்டு “சாமி இன்னும் கொஞ்சம் கொடுங்கோ” என்று கையேந்திக் குடித்த இந்த சமுதாயத்தின் மூடநம்பிக்கை நோயைப் போக்கி – பெண்ணடிமை நோயையும் நீக்கி – சுயமரியாதைப் பெறச் செய்த சுயமரியாதை மருத்துவர் தந்தை பெரியார். ஆகவேதான் கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

நேற்றுவரை ‘டூயட்’ பாடிக் கொண்டிருந்த ஒருவர் – இதுவே எனது கடைசிப் படம் என்று சொல்லி ‘டூயட்’ இன்னும் பாடிக் கொண்டிருப்பவர் தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி – வாரிசு அரசியல் என்று கூப்பாடு போடுகின்றார். முதலமைச்சர் பதவி வேண்டுமென்கிறார்.
இன்றைய எங்கள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் வைத்த எத்தனையோ தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த பிறகுதான் இந்த மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார். சினிமா முகத்தை வைத்துக் கொண்டு முதலமைச்சராகி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். சுயமரியாதையுள்ள, மானமுள்ள தமிழர்கள் ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள்.

வளர்ச்சி பெறுகின்ற வடசென்னை

இந்தப் பகுதி உள்ளடங்கிய வடசென்னை வளர்ச்சிக்கு என்று 1000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து – மகளிருக்குப் பட்டாவும் வழங்கி வடசென்னை மக்களின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தில் உழைக்கும் ஏழை மக்களுக்குரிய ஊதியத்தைக் கூட தராமல் ஏமாற்றுகின்ற அரசாக ஒன்றிய அரசு உள்ளது. இப்போது கூட அதற்காக அந்த ஒன்றிய அரசினைக் கண்டித்துதான் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தின் எதிர்காலம் பற்றிக் கூறுகையில், “இந்த இயக்கம் கலையாது – இணையாது” என்று குறிப்பிட்டு, பல்வேறு சோதனைகளைச் சந்தித்து – பா.ஜ.க., சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ்., ஆரியக் கூட்டத்தின் சதி வலைகளை அறுத்தெறிகின்ற பணிகளில் சளைக்காது இந்த 92 வயதிலும் பாடுபட்டு வருகின்றவர் நம்முடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்று குறிப்பிட்டு, சிதம்பரம் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை ஒவ்வொன்றாக விளக்கியும் சிறப்புரையாற்றினார் பா.மணியம்மை.

பெரியார் பெருந்தொண்டர் கி.சிட்டிபாபு, ஓட்டேரி இரா.எம்ரோசு ஆகியோருக்குக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.

வெங்கட்டம்மாள் சமாதி சாலை, பிரிக்கிளின் சாலைகளில் கழகக் கொடிகள் கட்டப்பட்டு, கொடிக் கம்பங்களும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
பங்கேற்றோர்

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி சசிகுமார், திரு.வி.க.கநகர் வடக்குப் பகுதி திமுக துணை செயலாளர் ஆர்.ராஜன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் இர.வீரமணி, வட்ட திமுக செயலாளர் சசிகுமார், திமுக இளைஞரணித் தோழர் எம்.தர்மராஜன், அம்பேத்கர் மன்றம் இர.நீலகண்டன் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் பங்கேற்றனர்.

கழகப் பொறுப்பாளர்கள்

பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை, தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், உடுமலை வடிவேல், க.கலைமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், வழக்குரைஞர் மு.வேலவன், க.செல்லப்பன், வடசென்னை மாவட்ட ப.க. செயலாளர் இராமு, புதுவண்ணை ஏ.மணிவண்ணன், பாலன், ஆர்.பொம்மியம்மாள், சி.சண்முகம், மு.பவானி, பா.ஆனந்தி, புரசை த.திராவிட எழில், த.யாழ்தமிழ், கே.கலைச்செல்வன், க.ஞானதேவி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக தி.திராவிட இலக்கியா நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *