அய்தராபாத், ஏப். 6- தெலங்கானா மாநிலத்தில் 86 மாவோயிஸ்ட்கள் காவல் துறையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு உடனடி நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அடிக்கடி இந்த மாவட்டங்களில் ஆயுதப்படை காவல் துறையின் வனப்பகுதிகளில் ரோந்துப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காவல் துறையினர் மாவோயிஸ்ட்களுடன் தீவிர துப்பாக்கி சூட்டிலும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், 86 மாவோயிஸ்ட்கள் தெலங்கானா மாநில பத்ராத்ரி கொத்தகூடம் காவல் நிலையத்தில், காவல் துறைத் தலைவர் சந்திரசேகர (ரெட்டி) முன்னிலையில் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர்.
அரசு நிதி உதவி
இவர்கள் மீது தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரண் அடைந்தவர்களில் 66 பேர் ஆண்கள், 20 பேர் பெண் மாவோயிஸ்ட்கள் ஆவர். தெலங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தபடி, சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு ஏற்றவாறு, 5 ஏக்கர் விவசாய நிலம், பசு மாடுகள், ஆடு, கோழி போன்றவை வளர்க்க அரசு நிதி உதவி வழங்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு உடனடி உதவியாக 86 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் நுகர்வோர் சிறப்பு முகாம்
1976 மனுக்களுக்குத் தீர்வு
சென்னை, ஏப்.6- மின் நுகர்வோர் மற்றும் பொது மக்களின் புகார்களை நிறைவு செய்யும் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 11 ஆயிரத்து 222 மனுக்கள் பெறப்பட்டன அவற்றில் 1976 மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்தது
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கis மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் நேற்று (5.6.2025) ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, மின்வாரியம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், பெறப்பட்ட 11,022 மனுக்களில் 1,976 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
அதிசயம் ஆனால் உண்மை!
மனைவி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கணவர்
மனைவி உயிருடன் நீதிமன்றத்திற்கு வந்ததால் பரபரப்பு: சிறையில் இருந்து கணவர் விடுவிப்பு
பெங்களூரு, ஏப். 6- கருநாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர சுரேஷ் (38). விவசாய கூலியான இவர் தனது மனைவி மல்லிகே (32) உடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு குருபர சுரேஷ் தனது மனைவியை காணவில்லை என குஷால் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் காவல்துறையோ உனது மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டாய் என்று கூறி அவரை அடித்து வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.. இந்த நிலையில் தனது காதலனுடன் சென்றதாக கூறி நீதிமன்றத்தில் மல்லிகே நேரில் வந்து கூறியதால், காவல்துறையினர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டு கொலைவழக்கில் இருந்து கணவரை விடுவித்து கருநாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.