புதுடில்லி, ஏப். 6- இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 10 கி.மீ. வீதம், குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து புறப்பட்டு துவாரகாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், அவர் சுமார் 60 கி.மீ. தூரத்தை நடந்து கடந்துவிட்டார்.
இதனிடையே, அவர் நடந்து செல்லும் வழியிலுள்ள கோவில்களுக்கும் சென்று வழிபட தவறவில்லை. இப்படி தமது நடைப்பயணத்தின் இடையில் அவ்வப்போது இடைவெளிவிட்டு அதன்பின், நடைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
சாலையில் நடந்து செல்லும் அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாமலிருக்க அவருக்கு பாதுகாப்புப் பணியில் இஸட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, உள்ளூர் காவல் துறையினரும் அவருக்கு பக்கபலமாக நடைப்பயணத்தில் உடன் செல்கின்றனர்.