கும்பகோணத்தில் அந்தணர் மாநாடு என்ற பெயரில் பார்ப்பனர்கள் மாநாடு கடந்த ‘‘மார்ச்சு 4ஆவது வாரத்தில் நடைபெற்றுள்ளது.
வழக்கம் போல விபீடணர்கள் சிலரும் பங்கேற்று, ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக கோஷம் போட்டு ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.
மாநாட்டில் என்ன பேசினார்கள் என்பது தான் முக்கியமானது.
(1) தமிழ் கலாச்சாரத்தை அறமும் நெறியுமாக பாதுகாக்கும் பிராமண சமூகத்தின்மீது அநீதிகள் இழைக் கப்படுகின்றன. நம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு மறுக்கப் படுகிறது. அந்தக் கொடுமையை திராவிடமே செய்கிறது.
அதனால் அநீதிகளை எதிர் கொள்ள பிராமணர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராமணர் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு உறுதியான பதில் அளிக்க வேண்டும்’’ என்று அந்த சங்கத்தின் தலைவராக இருக்கக் கூடியவர் பேசி இருக்கிறார்.
தமிழ் கலாச்சாரத்தை அறமும் நெறியுமாக பாதுகாப்பது பிராமண சமூகமாம்.
உண்மையைத் திரித்துப் பேசுவதில் கொஞ்சம் கூட வெட்கப்படாதது இந்தப் பார்ப்பனக் கூட்டம் என்பதற்கு. அச்சங்கத்தின் தலைவர் பேசியுள்ள இந்த உரையே போதுமானது.
தமிழ் கலாச்சாரம் என்பது ஜாதியை உள்ளடக்கமாகக் கொண்டதா? முதலில் இவர்கள் தமிழைத் தாய் மொழியாக ஏற்றுக் கொள்பவர்களா?
இவர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தப்பித் தவறிக்கூட தமிழில் பெயர் சூட்டுவதுண்டா? ஏதோ ஒரு சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற் கலைஞர் என்று சொல்லிக் கொண்டார்; அவ்வளவு தான் – எடுத்துக்காட்டாக இன்னொருவரை எடுத்துக் கூற முடியுமா?
கோயிலுக்குள் தமிழில் அர்ச்சனை என்றால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை தாவிக் குதித்துச் செல்பவர்கள் யார்?
பார்ப்பனர் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழைப் பயன்படுத்துவதுண்டா? பார்ப்பனர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த இந்து மதத்தைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார் முறைப்படி அர்ச்சகர்களுக்கான ஆகமக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை, அதே இந்து மதக் கோயிலில் அர்ச்சகர்களாக ஓர் அரசு சட்டம் இயற்றி நியமனம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று கதவைத் தட்டுபவர்கள் யார்?
பார்ப்பனர் அல்லாதார் தாம் சார்ந்த இந்து மதக் கோயிலில் உள்ள சாமி சிலையைத் தொட்டு விட்டால், தீட்டாகி விடும் என்றும், ஏன், ஒருபடி மேலே சென்று சாமி செத்து விடும் என்றும் வைகனாச ஆகமங்களை ஆதாரமாகக் காட்டி உச்சநீதிமன்றத்தில் வாதாடுவது இந்தப் பார்ப்பனர்தானே!
பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் பிராமணர்கள் என்றும் – அவர்கள் இரு பிறவியாளர்கள் என்றும் (துவி ஜாதி) அதற்கு அடையாளம்தான் இந்தப் பூணூல் என்றும் இந்த 2025ஆம் ஆண்டிலும் ஆணவமாகச் சுற்றித் திரிபவர்கள் யார்?
குடந்தை மாநாட்டில் பேசிய பார்ப்பனர்கள் தங்களை அந்தணர்கள் என்று உச்சரித்துக் கொண்டுள்ளனர்.
அந்தணர் என்பவர் யார்? திருவள்ளுவர் என்ன சொல்கிறார்?
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (குறள் 30)
என்று அந்தணர் என்பதற்கு இலக்கணம் கூறிச் சென்றுள்ளாரே திருவள்ளவர்.
‘‘எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு நடப்ப வர்களே அந்தணர்’’ என்று பொருள் இருக்க, அது பார்ப் பனர்களைக் குறிக்கும் என்பது எத்தகைய பித்தலாட்டம்!
யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலி கொடுத்து கடவுளைத் திருப்திப்படுத்துவதாகக் கூறிக் கொண்டவர்கள்தானே இவர்கள். இந்த நிலையில் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவர்கள் என்பது எப்படிப் பொருத்தப்படும்?
பிறப்பின் அடிப்படையில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாத ஜாதி என்று கூறும் இந்தப் பார்ப்பனர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களா?
‘தீண்டாமை ேக்ஷமகரமானது’ என்று சொல்லும் மனித குல விரோதியான சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று உச்சந்தலையில் உட்கார வைத்துக் கொண்டாடுபவர்கள் ‘‘கருணை’’ உள்ளம் என்றெல்லாம் பேசலாமா?
சங்கரமடத்துக்குச் செல்லும் சுப்பிரமணிய சாமி அய்யர் களும், முரளி மனோகர் ஜோஷிகளும் சரிசமமாக ஆசனத்தில் அமர முடியும் – காரணம் அவர்கள் பார்ப்பனர்கள்.
ஏ.பி.ஜே. அப்துல்கலாமாக இருந்தாலும், ஒன்றிய அமைச்சர் தகுதியிலிருந்த பொன். இராதாகிருஷ்ணனாக இருந்தாலும் சங்கராச்சாரிமுன் தரையில் தானே அமர முடியும்! இவர்கள்தான் கருணை உள்ளம் கொண்ட அந்தணர்களா?
கடவுளுக்கே பூணூல் மாட்டி, கடவுளையும் தங்கள் ஜாதிப் பட்டியலில் அடைத்துக் கொள்பவர்கள் அறநெறி பற்றியெல்லாம் பேசத் தகுதி உடையவர்கள்தானா?
இன்னும் சொல்லப் போனால் கடவுளுக்கு மேலே நாங்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ‘‘அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்’’ நூல் வெளியீட்டு விழாவில் பேசினார் என்றால், இவர்கள் தான் மும்மலத்தையும் (ஆணவம், கண்டம், மாயை) கடந்தவர்களா?
முதலில் ‘பிராமணர்கள்’ மாநாடு என்பதே தங்களின் ஜாதி ஆணவத்தைக் குறி்ப்பதுதானே!
பிர்மாவின் நெற்றியில் பிராமணன், தோளில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதங்களில் சூத்திரன் பிறந்தான் என்று பிறவிப் பேதம் பேசுவது பார்ப்பனர்கள் தானே!
இந்த 2025ஆம் ஆண்டிலும் இத்தகைய பித்த லாட்டமான மாநாடுகளை நடத்துவதை பார்ப்பனர் அல்லாதார் தான் புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!