மதுரையில் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பேச்சு
மதுரை,ஏப்.3- மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் 27-03-2025 வியாழன் மாலை 6 மணிக்கு தமிழ் மொழியை அழிக்கும் ஹிந்தி தேவையா? என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் பெ.தனசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கூட்டத்திற்கு முன்னிலை ஏற்று மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் மாவட்ட செயலாளர் இராலி.சுரேஷ், மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் த.ஜெயராஜ், இரா.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார். .
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கத்திற்கு கழக டைரி வழங்கி சிறப்பித்தார். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் சுப.முருகானந்தம், த.ம.எரிமலை, மாமன்ற உறுப்பினர் முரளி, காத்தவராயன், மாயன்பேருமாள், பவுன் ராஜ்சுரேஷ், தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாவட்டத்துணை அமைப்பாளர் மு.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர் தா.ஜெயராஜ், வட்டச்செயலாளர் நல்லகாமன் கூட்டத்திற்கு நன்கொடைகள் வழங்கி உணர்வை வெளிப்படுத்தினர் .
அறிவியல் விழிப்புணர்வு
க.அழகர், புரொபசர் சுப.பெரியார் பித்தனின் ‘மந்திரமல்ல – தந்திரமே’ என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.சுப.பெரியார்பித்தன் பல்வேறு விழிப்புணர்வு காட்சிகளை விளக்கிச் சொல்லி இது அனைத்தும் ‘தந்திரமே – மந்திரமல்ல’ என்பதை நகைச்சுவையோடு எடுத்துச்சொல்லி மக்களை ஆர்வமுடன் கேட்க வைத்தார். அதன்பின்னர் பேசிய அ.வேங்கைமாறன் ஹிந்தி மொழித் திணிப்பு என்பது தமிழ் நாட்டில் என்றும் எடுபடாது மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும், வடநாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் நல்ல ஊதியம்,நல்ல உணவு, பாதுகாப்பான நிம்மதியான குடும்பத்துடன் வளமாக வாழ தமிழ் நாட்டை நோக்கி வருகிறார்கள் எனக் கூறினார்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்திற்காக போடும் திட்டங்களையும் அதை நிறைவேற்ற கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிகத் திறமையாக ஆட்சி நடத்தி வருகிறார் எனப் புகழாரம் சூட்டினார். மாமன்ற உறுப்பினர் த.ஜெயராஜ் கலைஞரின் கேடயமாக பொன் முத்துராமலிங்கத்தால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். அதன் காரணமாக இன்றும் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வலுசேர்க்க உழைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். முனைவர் வா.நேரு தனது உரையில் புதிய கல்விக்கொள்கை, ஹிந்தித் திணிப்பு என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளைப் படிக்க விடாமல் ஆக்குவதற்கான சூழ்ச்சி என்று குறிப்பிட்டு ரோபோட்டிக் கம்பெனியின் சி.இ.ஓ ‘கென்னத்ராஜ் அன்பு அவர்களின் பேட்டியை எடுத்துக் கூறினார்.
செயற்கை
நுண்ணறிவு யுகத்தில்.
நோக்கவுரையாற்றிய மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் தன் உரையில், இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்த மொழித் திணிப்பும் தேவை இல்லை. எவரும் தேவைப்பட்டால் எந்த மொழியும் படித்துக் கொள்ளப்போகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு ஏன் ஹிந்தியைத் திணிக்கிறார்கள்? புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நோக்கம் வர்ணாசிரமம். நமது பிள்ளைகள் படிக்கக்கூடாது. மறுபடியும் ஆடு மேய்க்க, மாடு மேய்க்க நாம் போக வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இன்றைக்கு தந்தை பெரியாரின் கருத்து உலகம் முழுவதும் தேவைப்படுகிறது. பெரியார் உலகம் மயம் ஆகிறார்.உலகம் பெரியார் மயம் ஆகிறது. அதற்கான பணிகளை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்து வருகின்றார். திராவிட மாடல் அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தொடர்ச்சியான மக்கள் பணியைச் செய்து வருகிறது.அதே நேரத்தில் உரிமைக்கான போராட்டத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. அவருக்கு மக்கள் மகத்தான ஒத்துழைப்பு அளித்து வருகின்றார்கள்.மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டு கழகத் தோழர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்.
இரு மொழித் திட்டம்
தொடர்ந்து கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தந்தை பெரியார் 1926-ஆம் ஆண்டிலேயே எழுதினார்.பேசினார். நீதிக் கட்சி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.ஒரு நூற்றாண்டு காலமாய் தமிழ் நாட்டில் நடைபெறும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், அறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டம், அதனால் திராவிட மக்களுக்கு ஏற்பட்ட நனமை, ஹிந்தி பேசும் மாநிலங்களில் நிகழும் வறுமை,வேலை தேடி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வரும் நிலைமை எனப் பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டு பேசினார். 92 வயதிலும் தந்தை பெரியாரின் மனித நேயக் கொள்கையைப் பரப்ப அயராது உழைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கரத்தை வலுப்படுத்த இளைஞர்களே, மாணவர்களே,தோழர்களே வாருங்கள், வாருங்கள் என அழைப்பு விடுத்து உணர்ச்சிமயமான தன் உரையினை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் தோழர்கள் நா.முருகேசன், பொ.பவுன்ராஜ், ஜெயிலர் கலையரசன், பகுத்தறிவாளர் கழக வீர.பழனி வேல்ராஜன், தனுஷ்கோடி, க.சிவா, பா.காசி, அ.ராஜா, நா.மணிகண்டன், கோ.கு.கணேசன், ராஜா, மசாலா .முத்து, இரா.அழகுப் பாண்டி, பெத்தானியாபுரம் பாண்டி, ச.வேல்துரை, பேக்கரி கண்ணன், பெரி.காளியப்பன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர் கழக அமைப்பாளர் சீ.தேவராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.