சென்னை, ஏப்.2 இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் பேசுகையில், 2023-2024 நிதியாண்டில், 11 மாதங்களில் மட்டும், தமிழ்நாடு 12.62 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி) மதிப்புள்ள மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளதாக வர்த்தக போர்ட்டல் NIRYAT (National Import-Export Record for Yearly Analysis of Trade) தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 34.02 பில்லியன் டாலர் மதிப்பில் தமிழ்நாடு 37.09% பங்கைக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, 2027-2028–க்குள் ஆண்டுதோறும் 20-22 பில்லியன் டாலர் (ரூ1.6 – ரூ1.8 லட்சம் கோடி) மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை அடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-2024 நிதியாண்டின் பிப்ரவரி மாதம், 20 ஆம் தேதி வரை 12.6 பில்லியன் டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.