கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

viduthalai
3 Min Read

சென்னை, ஏப். 2- கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பணி

அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை அரசு ரத்து செய்து விட்டதால், தனக்கு அங்கன்வாடி பணியாளராக வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரான விக்ரமுக்கு 8 வார காலத்தில் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக நலத்துறை செயலாளரான ஜெயசிறீ முரளிதரன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

கருணை அடிப்படையில்

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று (1.4.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமூக நலத்துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன் ஆஜரானார். அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரான ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அங்கன்வாடி பணியாளராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே பணிநியமனம் வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அந்த அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என்றார். அதையடுத்து இந்த வழக்கில் சமூக நலத்துறைச் செயலர் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இஸ்லாமியர் பெயரில் உள்ள இடங்கள் பெயர் மாற்றம்: உத்தராகண்ட் அரசு

டெஹராடூன், ஏப். 2- உத்தராகண்ட் மாநிலத்தின் அவுரங்கசீப்பூரின் பெயர் இனி சிவாஜி நகராக மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள 2 சாலைகள் மற்றும் 13 தொகுதிகளில் உள்ள பெயர்கள் மாற்றப்படுகின்றன. இதில், அரித்துவாரில் 8, டெகராடூனில் 4, நைனிடாலில் 2 மற்றும் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் ஒன்று ஆகியவை அடங்கும். இந்த இடங்களின் பெயர் மாற்றப்பட்டு மக்களின் உணர்வு, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாபெரும் பங்களிப்பை வழங்கிய ஆளுமைகளிடமிருந்து மக்கள் உத்வேகத்தை பெற முடியும்.

அரசின் பரிந்துரைகளின்படி, பகவான்பூர் தொகுதியில் உள்ள அரித்துவார் மாவட்டத்தின் அவுரங்கசீப்பூர் இனி சிவாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பஹத்ராபாத் தொகுதியில் காஜ்வாலி மற்றும் சந்த்பூர் நகரங்கள் இனி முறையே ஆர்யா நகர் மற்றும் ஜோதிபா புலே நகர் என்று அழைக்கப்படும்.
அதேபோன்று நர்சன் தொகுதியின் முகமத்பூர் ஜாட் மற்றும் கான்பூர் குர்ஸ்லி ஆகியவை முறையே மோகன்பூர் ஜாட் மற்றும் அம்பேத்கர் நகர் என்று பெயரை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கான்பூர் தொகுதியின் இத்ரிஸ்பூர் மற்றும் கான்பூர் பகுதிகள் இனி நந்த்பூர் மற்றும் சிறி கிருஷ்ண்பூர் என்று அழைக்கப்படும். ரூர்க்கி தொகுதியில் உள்ள அக்பர்பூர் பஸலாபூர் இனி விஜயநகர் என்று அழைக்கப்படும்.

மேலும், டெகராடூனில் உள்ள மியான்வாலா ராம்ஜி வாலா எனவும், அப்துல்லாபூர் தக்ஸ்நகர் எனவும் நைனிடாலில் உள்ள நவாபி சாலை இனி அடல் மார்க் எனவும், பஞ்சகி அய்டிஅய் சாலை இனி குரு கோவல்கர் மார்க் என்று அழைக்கப்படும். உத்தம் சிங் நகரில் உள்ள சுல்தான்பட்டி நகர் பஞ்சாயத்து இனி கவுசல்யாபுரி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் தாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் சென்னை திரும்பினர்

சென்னை, ஏப்.2- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேர் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினர்.
தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்திய பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை வசமுள்ள மீன்பிடி படகுகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இழப்பீடு தொகை 6 லட்ச ரூபாயிலிருந்து 8 லட்ச ரூபாயாக அண்மையில் உயர்த்தப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிய இலங்கையின் மன்னார் நீதிமன்ற நீதிபதி ரபீக், மீனவர்களுக்கு இதுவரை இந்திய மதிப்பில் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துவந்த நிலையில், தற்போது அதனை 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *