100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் வரை நாடாளுமன்றத்திலும், களத்திலும் போராட்டம் கனிமொழி எம்.பி. உறுதி

3 Min Read

கோவில்பட்டி, மார்ச் 30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று (29.3.2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, தி.மு.க. ஒன்றிய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

100 நாள் வேலை
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி அமைச்சர், விவசாய துறை அமைச்சரை நானும், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம். ஓரிரு வாரங்களில் நிதி வரும் என்றார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது ரூ.4034 கோடி தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று கேட்டோம். ஆனால் அதற்கும் பதில் இல்லை.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளு மன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட் டத்தில் கலந்து கொண்டன. இதனால் நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
போராட்டத்தை கை விடுங்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் பலமுறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்றபோது எப்படி இவர்கள் கூறுவதை நம்ப முடியும்.
எனவே தான் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதைத், தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தவறான தகவல்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான, பொய்யான தகவலை கூறுகிறார்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர்.
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறி ரூ.2 ஆயிரம் கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.

மனமில்லை
நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை.
2024-2025 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.
ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் ரூ.10 ஆயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
இந்த நிலையில் தான் பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. அதனால் தான் பொறுத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் தி.மு.க. இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி தரும் வரை நாடாளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் தி.மு.க. போராடும். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *