குலக்கல்வி எதிர்ப்பு (29.3.1954)
குலக்கல்வித் திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தந்தை பெரியார் இறுதியாகப் போராட்டம் அறிவிக்க முடிவு செய்து, போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் இரத்தத்தில் கையெழுத்து இட்டு அனுப்புங்கள் என்று ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகத்தினர் இரத்தக் கையெழுத்து போட்டு அனுப்பிய கடிதங்கள் குவிந்தன.
நாகப்பட்டினம் அவுரி திடலில் பெரியார் அறிவித்தவாறு குலக்கல்வி எதிர்ப்புப் படை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் 29.03.1954 அன்று புறப்பட்டது.
குலக்கல்வி எதிர்ப்புப் படைக்கு பட்டுக் கோட்டை டி.வி.டேவிஸ் தளபதியாக இருந்து வழிநடத்த 29 தோழர்களுடன் நாகை அவுரி திடலில் நடந்த மாநாட்டிலிருந்து புறப்பட்டது படை. நாகையிலிருந்து சென்னை வரை சென்ற குலக்கல்வி எதிர்ப்புப் படை செல்லும் வழியெங்கும் ராஜாஜியின் குடிகெடுக்கும் குலக்கல்வித் திட்டத்தின் தீய நோக்கத்தை மக்களிடம் பரப்புரை மேற்கொண்டது.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக பெரியார் மூட்டிய தீ பற்றி எரிந்தது. வேறு வழியில்லாமல் ராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.