கொலை வழக்கில் கோயில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை!

viduthalai
2 Min Read

அய்தராபாத், மார்ச் 28 அய்தராபாத் நகரில் நடை பெற்ற ஒரு அதிர்ச்சி கரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து, அவரது உடலை கழிவறையில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு ரங்கரெட்டி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

கொலை வழக்கின் விவரங்கள்

குருகாந்தி அப்சரா, தொலைக்காட்சி நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் அய்தராபாத் சரூர்நகர் பகுதி யில் தனது தாய் அருணாவுடன் வசித்து வந்தவர். பங்காரு மைசம்மா கோயிலில் பூசாரி யாக பணியாற்றி வந்த சாய் கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சாய் கிருஷ்ணா ஏற்கனவே திருமணமானவர் என்பதை அப்சராவிடம் மறைத்து, 2023 தொடக்கத்தில் உறவை தொடங்கியதாக தெரிகிறது. அருணா அடிக்கடி கோயி லுக்கு சென்றதன் மூலம் இந்த தொடர்பு உருவாகிய தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2023 மார்ச் மாதத்தில், சாய் கிருஷ்ணா திருமணமானவர் என்பது அப்சராவுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் “என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உண்மையை வெளியிடுவேன்” என்று கூறி அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சாய் கிருஷ்ணாவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 2023 ஜூன் 3 ஆம் தேதி, “கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி, அப்சராவை காரில் அழைத்துச் சென்ற சாய் கிருஷ்ணா, ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி அப்சராவை கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலை மறைப்பதற்காக, முதலில் காரில் தனது வீட்டிற்கு கொண்டு சென்று, வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு நாள்கள் வைத்திருந் தார். அதன்பின், சரூர்நகரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள கழிவறையில் உடலை வீசி, சிமெண்ட் கொண்டு மூடினார். ஆனால், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அலைபேசி சிக்னல்களை ஆய்வு செய்த காவல்துறை, சாய் கிருஷ்ணாவை கைது செய்து, அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் உண்மையை கண்டறிந்தது.

நீதிமன்ற தீர்ப்பு

ரங்கரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தொலைபேசி பதிவுகள், தடய அறிவியல் அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், சாய் கிருஷ்ணாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. “இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *