புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொழிற்பூங்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு

viduthalai
1 Min Read

 புதுகை, மார்ச் 26- புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 200 ஏக்கரிலான தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைகிறது. இதனால் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் உள்ளது. பாறை நிலமாகவும், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் உள்ளதால் விவசாயமும் கேள்விக் குறியாக உள்ளது. தரிசாகவும், யூகலிப்டஸ் காடாகவும் காட்சி அளிக்கிறது. ஆழ்துளை கிணறு அமைத்து பாசனம் மேற்கொள்ள முடியவில்லை. உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லாததால் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு இப்பகுதி மக்கள் அன்றாடக் கூலி வேலைக்கு செல்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி உள்ளது. மேலும், உயர்கல்விக்கும் அப்பகுதியில் வசதி இல்லாத நிலை இருந்தது. திருச்சி, தஞ்சாவூரைச் ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் தொழில்சாலைகளால் புதுக்கோட்டைக்கு வணிக ரீதியிலான தொடர்பு இல்லை. இந்நிலையில்தான், புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தொழிற்பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை தொகுதியில் தெம்மாவூர், வத்தனாக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த புதிய தொழிற்பூங்கா மூலம் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் .மேலும், பொருளாதாரம், சாலை வசதிகள் மேம்படும். இதனால் இப்பகுதி மக்கள் உற்சாகமாக உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *