தொகுதி மறுவரையறை பற்றிய தென் மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் கருத்துரை வஞ்சிக்க முயற்சிக்கிறது ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு

viduthalai
7 Min Read

சென்னை, மார்ச் 23 குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய அரசு வஞ்சிக்க முயற்சிப்பதாக சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேளரா, தெலங்கானா, பஞ்சாப் முதலமைச்சர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை யறை தொடர்பாக பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை யில் நேற்று (22.3.2025) நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசிய தாவது:

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று இந்திய அரசியல் சாசனம் தெளிவாக கூறுகிறது. மத்திய-மாநில அரசுகளின் அதிகாரத்தை சமமாக கருதுகிறது. அந்த வகையில், தற்போதைய தொகுதி மறுவரையறை நடவடிக்கை, இந்த சமநிலையை சிதைக்கும். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்களை தண்டிப்பதாக அமையும்.
மேலும், நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், பன்மொழி கலாச்சாரத்துக்கும் அது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். எனவே, ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளை பெற்று அதன்பிறகு தொகுதி மறுவரையறை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநிலங்களின் கருத்தொற்றுமையை பெற்ற பின்னரே இந்த பணியை செய்ய வேண்டும். அதோடு, தொகுதி மறுவரையறை நடவடிக்கை தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா அல்லது மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுமா என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தெலங்கானா
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

இந்தியா

 

நாடு முழுவதும் நடைமுறைப்படுத் திய 1976 குடும்ப கட்டுப்பாட்டு திட் டத்தை தென் னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல் படுத்தின. ஆனால், வடஇந்திய மாநிலங்கள் அதை சரியாக நிறைவேற்றவில்லை. இன்றைய தினம் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்கள் பலனடையும். இது நியாயமானது அல்ல. தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்கு எதிராக தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பான அடுத்த ஆலோசனைக் கூட்டம் அய்தராபாத்தில் நடைபெறும். மேனாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அதே வழிமுறையைத்தான் பின்பற்றினார். அதைபோல் பிரதமர் மோடியும் தொகுதி மறுவரையையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப் படும் தொகுதி மறுவரையறை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். இதற்கான நடவடிக்கைகளை டில்லியிலும் மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சாப் மாநில
முதலமைச்சர் பகவந்த் மான்

இந்தியா

தற்போது இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளில் 2.39 சதவீதம் என்ற வகையில் 13 தொகுதிகள் பஞ்சாப் மாநிலத்துக்கு இருக்கிறது. இதுவே 850 இடங்கள் உருவாகும் பட்சத்தில் 5 இடங்களை எங்களுக்கு கூடுதலாக ஒதுக்கினால் கூட 2.11 சதவீதம் என்றளவில் பிரதிநிதித்துவம் குறையும். பிரதிநிதித்துவத்தை 2.40 சதவீதம் என்றளவில் அதிகப்படுத்த வேண்டுமானால் 21 இடங்களை வழங்க வேண்டும். அவர்கள் பஞ்சாப், தென்மாநிலங்களில் இனி வெற்றி பெற முடியாது என்பதால் இங்கெல்லாம் இடங்களை குறைத்து, ஹிந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கின்றனர். இந்த சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை எடுத்திருக்கும் தமிழ்நாட்டோடு பஞ்சாப் என்றைக்கும் துணை நிற்கும்.

கருநாடக துணை
முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

இந்தியா

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. சமூக நீதி, சமத்துவம் மட்டுமல்லாமல் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிலும் நாம் ஒன்றுபட்டு காணப்படுகிறோம். நாட்டில் உள்ள இக்கட்டான சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது, கல்வி மேம்பாடு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, கருநாடகம் போன்ற மாநிலங்களை நாடாளுமன்ற மக்களவை மறுவரையறை மூலம் ஒன்றிய அரசு வஞ்சிக்க முயல்கிறது.

இதை தடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். இது வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை இல்லை. கூட்டாட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினை. எந்தச் சூழ்நிலையிலும் நமது உரிமைகளையும், தொகுதிகளையும் விட்டுத் தரக்கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம்.

பாரத் ராஷ்டிர சமிதி கட்சி
செயல் தலைவர் கே.டி.ராமாராவ்

இந்தியா

நாங்கள் 14 ஆண்டுகள் ஒன்றிய அரசை எதிர்த்து போராடி தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினோம். நமது அடையாளத்தை எப்படி பாதுகாப்பது, நமது கூட்டாட்சி தத்துவத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து தமிழ்நாடு எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவீதம் 5 தென்மாநிலங்களின் பங்களிப்பாகும். ஆனால், அதேசமயம் சிறிய அளவிலான பங்களிப்பு தொகைதான் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கிறது.
ஒன்றிய அரசு திட்டங்களில் தென்மாநிலங்கள் பாரபட்சம் காட்டப்படுகிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை அதிகரிப்பதாக ஒன்றிய அரசு கூறுவதை, நாம் கவனத்துடன் அணுக வேண்டும். தெலங்கானா மாநிலம் 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மறுசீரமைப்புக் குழு உருவாக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்தது. ஆனால் 11 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழு உருவாக்கப்படவில்லை.

காணொலி மூலம் ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்

இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மாநிலங்கள் தங்களின் சொந்த முயற்சிகள் மூலம் தேசிய அளவிலான இந்த மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது கடினமாக உழைத்து மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநியாயம் இழைப்பதாகும். ஒடிசா குழந்தை பிறப்பு விகிதத்தை வெற்றி கரமாக குறைத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறைக்கு மக்கள் தொகை அளவு மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது. மேலும், இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவாக ஆலோசனை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினர்.

ஆந்திர மாநில மேனாள்
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்குக் கடிதம்

இந்தியா

இந்த விவகாரத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்தலைவரும் ஆந்திரா மேனாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்: 1971 முதல் 2011 வரையிலான 40 ஆண்டு காலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலத்தில் இப்பங்கு மேலும் குறைந்துள்ளதாக நம்புகிறோம். மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக இப்பங்கு குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில், மாநிலங் களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டில் தென் மாநிலங்களின் பங்கேற்பு கணிசமாக குறையும். அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அரசமைப்பை திருத்த வேண்டியது மிக அவசியம். நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட இப்பிரச்சினையில் தீர்வு காண உங்கள் தலைமையும் வழிகாட்டுதலும் மிக முக்கியமானவை. உங்களின் ஒரு உத்தரவாதம், பல மாநிலங்களின் அச்சங்களை போக்க பெரிதும் உதவும்.

பங்கேற்றோர்

6 மாநிலங்கள், 14 கட்சிகள் பங்கேற்பு: கூட்டு குழு கூட்டத்தில் 3 மாநில முதலமைச்சர்கள் தவிர, கேரளாவில் இருந்து பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட்), சலாம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்ட்), கும்பக்குடி சுதாகரன் (காங்கிரஸ்), ஜோஸ் கே.மணி (காங்கிரஸ்-மணி), பிரான்சிஸ் ஜார்ஜ் (கேரளா காங்கிரஸ்), தெலங்கானாவில் இருந்து மகேஷ் கவுட் (காங்கிரஸ்), இம்தியாஸ் ஜலில் (ஏஅய்எம்அய்எம்), கே.டிராமாராவ் (பிஆர்எஸ்), ஒடிசா சஞ்சய் குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்), பஞ்சாபில் இருந்து சர்தார் பல்வீந்தர் சிங் (சிரோமணி அகாலி தளம்) என மொத்தம் 6 மாநிலங்களைச் சேர்ந்த 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நினைவுப் பரிசுகள்

கூட்டத்தில் பங்கேற்றோருக்கு பத்தமடை பாய், தோடர் சால்வை, காஞ்சி கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களை மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பெட்டியில் வைத்து நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தாய்மொழியில் பெயர்

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் பேசுவதை தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, பஞ்சாபியில் கேட்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *